2025-ஆம் ஆண்டுக்கான செஸ் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும்: பிடே அறிவிப்பு..!
India to host 2025 Chess World Cup Bidey announces
2025-ஆம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதாக சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்துள்ளது.
தற்போது பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை வைஷாலி உள்பட, ஹரிகா, ஹம்பி என 46 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு ஆடவர் (ஆண்கள் ) செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை இந்த செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 206 வீரர்கள் நாக் அவுட் முறையில் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செஸ் போட்டி நடைபெறும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிடே தலைமை நிர்வாக அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி கூறியதாவது: செஸ் போட்டிகள் மீது ஆர்வமும், அதிக ஆதரவும் கொண்ட நாடான இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை போட்டி நடக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
செஸ் போட்டிகள் மீது இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 150 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டிகள் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
India to host 2025 Chess World Cup Bidey announces