காயங்களிடம் தோற்ற சாம்பியன்...! 'என் நேரம் முடிந்தது'…! - கண்ணீருடன் ஓய்வு அறிவித்த சாய்னா நேவால்
champion defeated by injuries My time over Saina Nehwal announces retirement with tears
இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் தங்க எழுத்துகளில் பதியப்பட்ட பெயர் -சாய்னா நேவால். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டை பெருமைப்படுத்திய அவர், தற்போது தனது விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

2023 சிங்கப்பூர் ஓபனே அவரது கடைசி போட்டியாக அமைந்தது.தனது ஓய்வு குறித்து மனம் திறந்து பேசிய சாய்னா,“நான் உண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கோர்ட்டை விட்டு விலகிவிட்டேன். விளையாட்டுக்குள் நுழைந்ததும் என் விருப்பப்படி தான்; வெளியேறியதும் என் மனசுக்கேட்டபடி தான்.
அதனால் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைத்தேன்” என்றார்.மேலும் அவர் தெரிவித்ததாவது,"என் ஓய்வை ஒரு பெரிய சம்பவமாக நான் பார்க்கவில்லை. என் நேரம் முடிந்துவிட்டது என்று தான் உள்ளுக்குள் உணர்ந்தேன். முன்புபோல் தீவிரமாக உழைக்க உடல் ஒத்துழைக்கவில்லை.
குறிப்பாக என் மூட்டுகள் எனக்கு எதிராக மாறிவிட்டன.உலக தரத்தில் போட்டியிட தினமும் 8–9 மணி நேரம் பயிற்சி செய்வோம். ஆனால் இப்போது ஒரு மணி அல்லது இரண்டு மணிக்குள்ளேயே என் மூட்டு செயலிழந்துவிடும். அது வீங்கி விடும். அதன் பிறகு ராக்கெட்டை தூக்கவே கஷ்டமாக இருக்கும்.
அந்த நிலைமைக்கு பிறகு, ‘இதுவரை போதும்’ என்று முடிவு செய்தேன். இதற்கு மேல என்னால் போராட முடியாது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.2016 ரியோ ஒலிம்பிக்கில் ஏற்பட்ட கடுமையான மூட்டு காயம் அவரது வாழ்க்கையை திருப்புமுனையாக மாற்றியது.
இருப்பினும் மன தைரியத்துடன் மீண்டு வந்து, 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும், 2018 காமன்வெல்த் விளையாட்டில் தங்கமும் வென்று வலுவான கம்பேக் கொடுத்தார்.ஆனால், காயங்கள் அவரை விடவில்லை. தொடர்ச்சியான உடல் பிரச்சனைகள் தொடர்ந்தன.
இறுதியாக 2024-ஆம் ஆண்டு, அவருக்கு மூட்டு வலி மற்றும் குருத்தெலும்பு தேய்மானம் (Cartilage Degeneration) இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவே அவரது ராக்கெட்டுக்கு இறுதி ஓய்வு மணி அடித்தது.
English Summary
champion defeated by injuries My time over Saina Nehwal announces retirement with tears