விஜயதசமி கொண்டாடுவது ஏன்.? அதன் சிறப்புகள் என்ன.?
Vijayadhasami history and special
சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். விஜயதசமி என்றால் வெற்றியை தருகிற நாள் என்று அர்த்தம்.
நவராத்திரி வழிபாட்டின் இறுதி நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்க்கை ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10ஆம் நாளில் அவனை வெற்றி கொண்டாள். அந்த வெற்றியை குறிக்கும் தினமே விஜயதசமி ஆகும்.
புராணக்கதை :
பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தை கண்டு மனம் இறங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரை கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். பின்னர் தனக்கு மரணமில்லாத வரத்தை தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால், பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே, வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார்.
இதையடுத்து, தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும் என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் ஆபத்து வர வாய்ப்பில்லை என்று எண்ணினான் மகிஷன்.
தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டனர்.
தேவியும் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க போர் செய்ய முற்பட்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தை அன்னைக்கு கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.
அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10ஆம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள் அன்னை. அந்த வெற்றி திருநாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அசுரனை வென்று அனைவருக்கும் நன்மையை அளித்த அன்னையை போற்றி வழிபட்டால் தீமைகள் ஏதும் நெருங்காது.
விஜயதசமி சிறப்பு :
வெற்றியை தரும் நாளாக விஜயதசமி திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் அவற்றை தொடங்குவது நன்மை தரும். மேலும், எந்தவொரு சுப விஷயங்களையும் விஜயதசமி நாளில் தொடங்கினால் எளிதில் வெற்றி பெறலாம்.
English Summary
Vijayadhasami history and special