தினம் ஒரு திருத்தலம்.. மீசையுடன் வீர கோலம்.. ஆவுடைசிவன்.. அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில்.!
Today special veerabathirar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
ஆந்திர பிரதேசம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ராயசோட்டி என்னும் ஊரில் அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கடப்பாவில் இருந்து சுமார் 51 கி.மீ தொலைவில் ராயசோட்டி என்னும் ஊர் உள்ளது. ராயசோட்டியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
ராஜகோபுரத்துடன், வீரபத்திரருக்கென பிரதானமாக அமைந்த பெரிய கோயில் இது. மூலஸ்தானத்தில் வீரபத்திரர் அருகில் தட்சன் வணங்கியபடி அமர்ந்திருக்கிறான். வீரபத்திரருக்கு வலப்புறத்தில் மாண்டவ்யர் பூஜித்த சிவலிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு பூஜை செய்த பிறகே, வீரபத்திரருக்கு பூஜை செய்கின்றனர்.
வீரபத்திரர் காலையில் பால ரூபமாகவும், மாலையில் மீசையுடன் வீர கோலமாகவும் காட்சி தருகிறார்.
மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் வீரபத்திரர் மீது சூரிய ஒளி விழுகிறது. முதல் நாளில் காலில் விழும் ஒளி, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உடலில் விழுந்து, ஐந்தாம் நாள் முகத்தில் விழும்.
திங்கள்தோறும் வீரபத்திரர், பத்திரகாளி இருவரும் பல்லக்கில் எழுந்தருளுகின்றனர்.
பொதுவாக ஆவுடையின் மீது சிவலிங்கத்தை பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் ஆவுடையின்மீது சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். இவரை 'ஆவுடைசிவன்" என்கிறார்கள்.
இத்தல வீரபத்திரருக்கு 'ராஜராயுடு" (அனைவருக்கும் தலைவர்) என்ற பெயரும் உண்டு.
வேறென்ன சிறப்பு?
வீரபத்திரர் சன்னதி எதிரில் சிவன், வீரபத்திரர் இருவருக்குமாக வீர நந்தி, சிவ நந்தி என இரண்டு நந்திகள் உள்ளன. இந்த இரண்டு நந்திகளும் சன்னதியிலிருந்து விலகியிருப்பது வித்தியாசமான அமைப்பு ஆகும்.
வரசித்தி விநாயகர், காலபைரவர், எல்லம்மன், சண்முகர், இரட்டை லிங்கம், அகோரசிவன், நவகிரக சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள கோபுரம் 3 நிலைகளை கொண்டது.
ராஜகோபுரத்திற்கு வெளியில் விமானத்துடன் கூடிய தனி மண்டபத்தில் நந்தீஸ்வரர் இருக்கிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மாசியில் பிரம்மோற்சவம், திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
உயர் பதவி, தலைமை பொறுப்பு கிடைக்க, பயம் நீங்க, மனக்குழப்பம் தீர வீரபத்திரரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
அம்மை, தோல் வியாதி ஏற்பட்டவர்கள் வீரபத்திரர் பாதத்தில் தேங்காய் வைத்து பூஜித்து, தேங்காய் தண்ணீரைப் பருகியும், உடலில் தேய்த்தும் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், சர்க்கரைப் பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special veerabathirar temple