வராக அவதாரம் எடுத்த பெருமாள்.. தவிட்டுப்பானை தாடாளன்.. அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில்.!
Today special thirivikraman temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி என்னும் ஊரில் அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் சீர்காழி என்னும் ஊர் உள்ளது. சீர்காழியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
முன்மண்டபத்தில் வராக அவதாரம் எடுத்த பெருமாள் வலக்கையை தானம் பெற்ற கோலத்தில் வைத்து, இடக்கையில் குடை பிடித்தபடி சாளக்கிராம மாலை அணிந்து காட்சி தருகிறார்.
சாளக்கிராம மாலை அணிந்தபடி இருக்கும் மூலவரின் சங்கும், பிரயோக சக்கரமும் சாய்ந்தபடியே இருக்கிறது.
மூலவருக்கு மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்த விமானம் எனப்படும்.
திரிவிக்கிரமரின் வலப்பாதத்திற்கு அருகில் உற்சவர் தாடாளன் இருக்கிறார். இவரை 'தவிட்டுப்பானை தாடாளன்" என்றும் சொல்கின்றனர்.
'தாள்" என்றால் 'பூமி அல்லது உலகம்", 'ஆளன்" என்றால் 'அளந்தவன்" என்று பொருள். தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால் ஆண்டாள் இவருக்கு 'தாடாளன்" என்ற பெயரை சூட்டினாள்.
வேறென்ன சிறப்பு?
பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியை தாங்கியபடி இருப்பதைப்போல, இங்கு தாயார் லோகநாயகி மார்பில் திரிவிக்கிரமரை தாங்கியபடி காட்சி தருகிறாள்.
ஒரு கால் ஊன்றி மற்றொரு காலை தூக்கி நின்று கொண்டிருப்பதால் சுவாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க சுவாமி பதக்கத்தை இத்தலத்தில் லோகநாயகி தாங்குகிறாளாம்.
மூலவருக்கு அருகிலேயே கையில் வேலுடன், காலில் தண்டை அணிந்த கோலத்தில் திருமங்கையாழ்வார் காட்சியளிக்கிறார்.
உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டி கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் ராமர் சன்னதியும், கோயிலுக்கு எதிரே வெளிப்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது.
இங்குள்ள தங்க கருடனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 28வது திவ்ய தேசம் ஆகும்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பணிகளில் சிறக்க, பதவி உயர்வு பெற, ஆயுள் விருத்தி பெற இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு துளசி மாலை சாற்றியும், வஸ்திரம் அணிவித்தும், சர்க்கரைப்பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
English Summary
Today special thirivikraman temple