தினம் ஒரு திருத்தலம்.. நான்கு புஜங்களுடன்... பள்ளிகொண்ட பெருமாள்.. அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில்.!
Today special senganmal temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநாங்கூர் என்னும் ஊரில் அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் திருநாங்கூர் என்னும் ஊர் உள்ளது. திருநாங்கூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார்.
தனது தலையையும், வலது கையையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப்பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.
கருவறையில் லட்சுமி நாராயணர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தானகோபால கிருஷ்ணன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் 'அம்பலம்" என அழைக்கப்படுகிறது.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 37வது திவ்ய தேசம் ஆகும்.
வேறென்ன சிறப்பு?
திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம்.
இக்கோயிலை 'பள்ளிகொண்ட பெருமாள் கோயில்" என்றும் கூறுவர்.
சிவன், செங்கமல நாச்சியார் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
இகோயிலில் செங்கமலவல்லி தாயாருக்கு தனிச்சன்னதியும் அமைந்துள்ளது.
மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி 12 ஆழ்வார்கள், அனுமன், சக்கரத்தாழ்வார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்தல பெருமாளை வணங்கினால் அரசாளும் வல்லமை கிடைக்கும், அரசு பதவிகள் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பெருமாளுக்கு பொங்கல் படைத்தும், துளசி அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special senganmal temple