நான்கு கரங்களுடன் வீரபத்திரர்.. ஜங்கமேஸ்வரர்.. அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்.!
Today special salem veerabathirar swamy temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சேலம் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
மூலஸ்தானத்தில் வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். வலப்புறம் தட்சனும், இடப்புறம் பத்திரகாளியும் காட்சி தருகின்றனர்.
பத்திரகாளியின் கைகளில் பாசம், சூலம், உடுக்கை ஆகியவை அமைந்துள்ளன.
சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் முத்துப்பல்லக்கில் வீதியுலா செல்கிறார்.
பொதுவாக வீரபத்திரருக்கு வில்வம், வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். ஆனால், இங்கு இவருக்கு மூங்கில் இலை மாலை அணிவிப்பது விசேஷம்.
பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீரபத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.

வேறென்ன சிறப்பு?
வீரபத்திரர், சிவனின் அம்சம் என்பதால் சிவலிங்கம் ஒன்றை தனிச்சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'ஜங்கமேஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறார். இவரையும் வீரபத்திரராகவே பாவித்து பூஜை செய்கின்றனர்.
ஐப்பசி பௌர்ணமியில் ஜங்கமேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண், பெண் இருபாலருக்கும் பிரசாதமாக தருவர். ஆனால், இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
நவகிரக சன்னதி எதிரில், ராஜகணபதி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் 'அனுக்கிரக மூர்த்தி"யாக காட்சி தருகிறார்.
அம்பாள் வேதநாயகி, வள்ளி, தெய்வானை சமேத முருகன் சன்னதிகளும் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளன.
சிவன் சன்னதி எதிரே மேல் விதானத்தில் 12 ராசிகளுடன் கூடிய ராசிக்கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்காக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகர் மற்றும் சனீஸ்வரரை பிரார்த்தனை செய்கின்றனர்..
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவனுக்கு அபிஷேகம் செய்தும், வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special salem veerabathirar swamy temple