இடது பாகத்தில் மயில்..108 சங்காபிஷேகம்.. அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில்.!
Today special sakthimalai Murugan temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி என்னும் ஊரில் அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
நீலகிரியில் இருந்து சுமார் 34 கி.மீ தொலைவில் கோத்தகிரி உள்ளது. கோத்தகிரியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
முருகன் தண்டாயுதத்துடன் நிற்பது போல் இல்லாமல் இத்தலத்தில் வேலுடன் காட்சியளிக்கிறார்.
மூலவரின் இடது பாகத்தில் மயில் தோகை இருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இத்தலத்தில் ஞான பண்டிதனாகிய முருகப்பெருமான் ஞான சக்தியாக விளங்குவதால் இத்தலம் சக்திமலை எனப் பெயர் பெற்றது.
இத்தலத்தில் முருகப்பெருமானை வேண்டி தியானத்தில் ஈடுபட்டால் மன அமைதி பெற்று படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பது நம்பிக்கை.

வேறென்ன சிறப்பு?
இத்தலத்தின் பிரகாரத்தில் ஆதி விநாயகர், சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை, பைரவர், சண்டிகேஸ்வரர், நாகர் ஆகியோர் தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.
இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகிய மூவரும் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் சனி பிரதோஷ நாளன்று 108 சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு மஹாந்யாஸ பாராயணமும், ருத்ர ஹோமும் செய்யப்படுவது மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகியவை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் வருட வைபவம் கொடியேற்றத்துடன் 11 நாட்கள் நடைபெறும். 9ஆம் நாள் திருக்கல்யாணமும், 10ஆம் நாள் தேரோட்டமும் நடைபெறும்.
கிருத்திகை, பௌர்ணமி, சண்டி, பிரதோஷம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
வழக்கு சார்ந்த பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் கால்நடைகளின் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி இக்கோயிலில் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.
செவ்வாய் மற்றும் நாகதோஷம் இருப்பவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special sakthimalai Murugan temple