வலது பக்க திருமடியில் தாயார்.. பால ஆஞ்சநேயர்..அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.!
Today special Lakshmi narasimmar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
வேலூர் மாவட்டம் சிங்கிரி கோயில் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
வேலூரிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் சிங்கிரி கோயில் உள்ளது. சிங்கிரி கோயிலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
ஆயிரத்து நானூறு வருடங்கள் பழமையான அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மிக ரம்மியமான மலைகள் சூழ்ந்த பகுதியில் 80 அடி உயரமும், 100 படிகளும் கொண்ட சிறிய மலையின் மீது அமைந்துள்ளது.
மேலே ஏறி சென்றால் கர்ப்பக்கிரகமும், அர்த்தமண்டபமும் சேர்ந்து அமையப்பெற்ற மிகப்பெரிய கருவறையாக உள்ளது.
இந்த மிகப்பெரிய கருவறையில் சுமார் ஆறு அடி உயர லட்சுமி நரசிம்மர் நான்கு திருக்கைகளுடன் காட்சியளிக்கிறார். அதாவது, மேல் இரண்டு திருக்கைகளில் சங்கு சக்கரமும், இடது கையை தனது மடியின் மீதும், வலது கையால், தனது வலது திருமடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தாயாரை ஆலிங்கனம் செய்த வண்ணமும் சாந்த சொரூபியாய் காட்சியளிக்கிறார்.
தாயார் பொதுவாக இடது பக்க திருமடியில் தான் வீற்றிருப்பார். ஆனால் இத்திருக்கோயிலில் தாயார் வலது பக்க திருமடியில் அமர்ந்திருக்கும் கோலம் மிகச் சிறப்பானது.
வேறென்ன சிறப்பு?
கர்ப்பக்கிரகத்தின் எதிரே பெரிய திருவடியான கருடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இத்திருத்தலத்தில் கருவறையின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள கல்வெட்டுகள் இத்தல பெருமாளை அவுபள நாயனார் என்று குறிப்பிடுகின்றன.
இந்த கல்வெட்டு ஒன்றில் இவ்வூரினை ஓபிளம் என்றும், பெருமாளை சிங்கப்பெருமாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே காலப்போக்கில் மருவி சிங்கிரி கோயில் என்றானது.
இத்திருக்கோயிலில் முதல் ஐம்பது படிகள் ஏறியவுடன் உள்ள குன்றில் பால ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி பெருவிழா, தமிழ் மாதாந்திர விழா போன்றவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரதி சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் நடைபெறும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பக்தர்கள் தங்களது அனைத்து விதமான பிரார்த்தனைகளும் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டியவை நிறைவேறியதும் மூலவருக்கு அபிஷேகம் செய்தும், வெற்றிலை மாலை சாற்றியும், புதுவஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
English Summary
Today special Lakshmi narasimmar temple