தினம் ஒரு திருத்தலம்.. அமர்ந்த நிலையில் காளியம்மன்.. மதுரை வீரன்.. அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்.!
Today special kaliyamman temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
திண்டுக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயிலின் மூலவரான அம்மன் வடபுறமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலின் வாசலில் கருப்பண சுவாமி, மதுரை வீரன் சுவாமி நின்ற நிலையில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயில் உட்பிரகாரத்தில் கால பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகியோர் காட்சி தருகின்றனர்.
கன்னிமூல கணபதி, பேச்சியம்மன், கைலாசநாதர், வரதராஜப்பெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோர் கோயிலின் உட்பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலின் நுழைவு பகுதியில் விநாயகரும், முருகனும் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் காளியம்மன், சரஸ்வதி, லட்சுமி மற்றும் காசி விஸ்வநாதர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.
வேறென்ன சிறப்பு?
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவின் போது ஊர் பொதுமக்கள் சார்பில் முதல் மாவிளக்கு எடுத்தல் இக்கோயிலில் இருந்துதான் துவங்குகிறது. இது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
இக்கோயிலின் நுழைவு பகுதியில் திரிசூலம் அழகாக காட்சியளிக்கிறது. இக்கோயிலின் ராஜகோபுரம் 32 அடி உயரமாகும்.
வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் (உற்சவர்) இப்பகுதியில் உள்ள தெருக்கள் தோறும் வீதி உலா வருவது தனிச்சிறப்பம்சமாகும்.
திருமணம், வீடு, சொத்து வாங்குதல், தொழில் போன்றவற்றை குறித்து பூக்கட்டி போடுதல் (சிவப்புஃவெள்ளை) இக்கோயிலின் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். சிவப்பு நிறம் வந்தால் அம்மன் அனுமதி தந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் வேண்டுதல், தொழிலில் வெற்றி பெறுதல் ஆகியவற்றிற்காக இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் காளியம்மனுக்கு தீச்சட்டி எடுத்தும், சேவல் பலி கொடுத்தும், பொங்கல் வைத்தும், ஆடி வெள்ளியில் கஞ்சி காய்ச்சியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special kaliyamman temple