லிங்கோத்பவரின் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர்.. பரளி விநாயகர்.. அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்.!
Today special baraythurainathar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை என்னும் ஊரில் அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருச்சியில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் திருப்பராய்த்துறை என்னும் ஊர் உள்ளது. திருப்பராய்த்துறையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயிலில் சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது. எனவே இத்தல சுவாமி 'பராய்த்துறைநாதர்" என்ற பெயர் பெற்றார்.
இத்தல அர்த்த மண்டபத்தில் உள்ள உற்சவர் பிட்சாடனராக காட்சியளிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66வது தேவாரத்தலம் ஆகும்.
கருவறைக்கு பின்புறம் உள்ள கோஷ்டத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள விநாயகர் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவர் 'பரளி விநாயகர்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
வேறென்ன சிறப்பு?
அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனித்தனிச் சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருள்பாலிக்கின்றனர்.
பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு அருகில் மற்றொரு சன்னதியில் இருக்கும் தண்டாயுதபாணி காலில் செருப்பு அணிந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
முன்மண்டபத்தில் 12 ராசிகளை குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவ லிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.
கருவறைக்கு பின்புள்ள தலவிருட்சமான பராய் மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் உள்ளது.
இக்கோயிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடக்கும்போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகாசியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் முதல் துலா முழுக்கு விழா ஆகியவை இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
தோல்நோய் மற்றும் புற்றுநோய் நீங்கவும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வருவதற்காகவும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
அம்பாளை பிரார்த்தனை செய்தால் திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special baraythurainathar temple