இந்த தினங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பது ஏன்?!
Subakariyam at ashdami, navami
பொதுவாக நாள் பார்த்து குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்படையாகக் கொண்டு நல்ல நாள் கணிப்பார்கள். சில நட்சத்திரங்கள் உள்ள தினங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள் அது ஏன்? என்பதை பார்ப்போம்.
சில நட்சத்திரங்கள் சுபகாரியத்துக்கு விலக்கு என்றால், அந்த நட்சத்திரங்கள் செய்யும் உதவியை வாங்கிக்கொள்ள நமக்குத் தகுதி போதவில்லை என்று பொருள். அதனால் விலக்க வேண்டும் என்கிறார்கள். அந்த நட்சத்திரங்கள்...
பரணி
பரணி என்பது ஆதியில் 'அபபரணி" என்று பெயர். அது எமனின் நட்சத்திரம். அழிப்பது என்று அர்த்தம். அதாவது ஜீவராசிகளை எல்லாம் ஒடுக்குவது இதன் வேலை. ஒடுக்குவது என்ற வார்த்தை, நாம் நல்ல காரியம் செய்யும்போது காதில் பட்டாலே நம் மனதில் தடங்கல் வந்துவிடும்.
கிருத்திகை
இன்னொரு நட்சத்திரம் கிருத்திகை. கிருத்திகை நட்சத்திரம் என்பது நெருப்பு. அந்த நெருப்பு, நமக்கு ஆக்கம் கொடுப்பதாக இல்லாமல் அழிவு கொடுக்கும் நெருப்பாக இருப்பதால், அந்த நட்சத்திரத்தை விட்டுவிடலாம் என்கிறார்கள்.
பூரம்
மற்றொன்று பூரம். பூர்வ பல்குனி நட்சத்திரம். இதிலும் நட்சத்திர தேவதைகள் நமக்கு நன்மை செய்பவையாக இல்லை. ஜோதிட சாஸ்திரம் தெரிந்த பெரியோர், வேதங்களில் உள்ள குறிப்பை வைத்துக்கொண்டு மேற்படி நட்சத்திரங்களில் சுபகாரியங்கள் செய்ய வேண்டாம் என்கிற உபதேசத்தை தந்தார்கள்.
அஷ்டமி, நவமி திதிகளில் சுபகாரியங்கள் மேற்கொள்ளத் தயக்குவது ஏன்?
அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.
கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார், இறுதியில் வெற்றி பெற்றார்.
இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும் நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுபகாரியங்கள் (திருமணம், கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
English Summary
Subakariyam at ashdami, navami