திருமண வரம்.. தீர்க்க சுமங்கலி வரம் தரும்... காரடையான் நோன்பு...!
karadaiyan nonbu special 2021
வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.
திருமணம் ஆகாத பெண்கள் தங்களின் திருமணத்திற்கும், சுமங்கலி பெண்கள் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் இந்த நோன்பினை மேற்கொள்வார்கள்.
விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு ஆகும். மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.
இந்தப் பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்யத்தை புதிதாக மாற்றிக்கொள்வார்கள். அதாவது, மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வார்கள். இந்த நோன்பின்போது தாலிக் கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள். சிலர் சரடில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.
காரடையான் நோன்பு மாங்கல்ய பலன் தரும் விரதம் எனவும், தீர்க்க சுமங்கலி வரம் அருளும் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் என்றும் அழைப்பர்.
காரடையான் நோன்பின் தத்துவம்:
கணவனோடு எப்பொழுதும் சுமங்கலியாக வாழவேண்டும் என்பதுதான் இவ்விரதத்தின் தத்துவம். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.
பலன்கள் :
இவ்விரத முறையை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பின்பற்றுவதால் கணவன், மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நிறைவான திருமண வாழ்வு கிடைக்கும். எல்லாவித செல்வங்களுடன் நிறைவான வாழ்க்கை பெண்களுக்கு கிடைக்கும்.
கணவரின் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யமாகும். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்?
காரடையான் நோன்பு மேற்கொண்டு சாவித்திரி வீரம், பக்தி, விவேகம், பொறுமை, திடநம்பிக்கை ஆகியவற்றுடன் எமதர்மரிடம் போராடி தனது கணவனின் உயிரினைத் திரும்பப் பெற்றாள் சாவித்திரி. அதேபோல் நாமும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இவ்விரத வழிபாட்டினை மேற்கொண்டு வாழ்க்கையின் இன்னல்களை வென்று வசந்தமாக்குவோம்.
English Summary
karadaiyan nonbu special 2021