நாளை மார்கழி திருவாதிரை... விரதம் இருப்பது எப்படி? பலன்கள் என்ன?
How to thiruvathirai viratham
மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். இவ்வழிபாடு நாளை (19.12.2021) ஞாயிற்றுக்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது.
மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலமானது தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்த காலமாகும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.
திருவாதிரை விரதம் இருக்கும் முறை :
மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும்.
சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும்.
சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
அன்று பகலில் சாப்பிடக்கூடாது.
சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.
இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.
இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து செய்யலாம்.
ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது.
இந்த ஐந்திற்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களானது சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் (நிலம்) ஆகியவை.
இதில் முதன்மை ஆலயமான சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள்.
திருவாதிரை விரதத்தின் பலன்கள் :
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார்.
தாலி பலன் பெருகும்.
பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும்.
English Summary
How to thiruvathirai viratham