"அந்த மனசுதான் சார் கடவுள்" இமாசல பிரதேசத்தில் 2 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரை பணயம் வைத்து கடமையாற்றிய நர்ஸ்!
That mind is God Nurse who risked her life to vaccinate a 2 month old baby in Himachal Pradesh
இமாசலப் பிரதேசம் மண்டி மாவட்டம் சவுகார்காட் அருகே உள்ள சுந்தர் என்ற மலைக்கிராமத்தில் மருத்துவ வசதிகள் இல்லாததால் அங்குள்ள மக்கள் அடிக்கடி சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது அந்த பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டிய காலம் வந்திருந்தது.
ஆனால் சுந்தர் கிராமத்தை அடைய, டிகார் என்ற ஊரிலிருந்து வரவேண்டும். அந்த வழியில் சிற்றாறு ஒன்று இருந்தது. கனமழையால் அந்தச் சிற்றாறு வெள்ளம் கரைபுரண்டு காட்டாறாக ஓடியது. இதனால் குழந்தைக்கு தடுப்பூசி போட முடியாமல், நோய்வாய்ப்பட்டுவிடுமோ என்ற அச்சம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், டிகார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் கமலா, தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்தார். மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை சுமந்து, வெள்ளத்தால் ஆபத்தாக பாய்ந்தோடிய காட்டாற்றைக் கல்லிலிருந்து கல்லாக தாண்டி உயிரை பணயம் வைத்து கடந்து சென்றார்.
அந்த கிராமத்தை சென்றடைந்த அவர், பச்சிளம் குழந்தைக்கு தேவையான தடுப்பூசியை செலுத்தி தனது கடமையை நிறைவேற்றினார். பின்னர் மீண்டும் அதே ஆற்றைக் கடந்து தனது ஊருக்குத் திரும்பினார்.
ஆர்ப்பரித்து பாய்ந்தோடிய காட்டாற்றைக் கடந்து செல்லும் கமலாவின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானவுடன் வைரலாகி வருகிறது. நர்ஸ் கமலாவின் சேவை மனப்பான்மை, மனதிடத்துடனான கடமையுணர்வு அனைத்துக் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
“உயிரைவிட மேலானது கடமை” என்பதை நடைமுறையில் காட்டிய நர்ஸ் கமலா, சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் “சேவை மனப்பான்மையின் சின்னம்” என போற்றப்பட்டு வருகிறார்.
English Summary
That mind is God Nurse who risked her life to vaccinate a 2 month old baby in Himachal Pradesh