கருக்கி எடுக்கும் கோடையிலும் 10 ஏக்கரை பசுமை குறையாமல் காத்த இயற்கை விவசாயி - கை கொடுத்த கடவுளின் வரம்..!
10 acre agri land with traditional cultivation
நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் வேளாண் தொழிலில், அதிக மகசூலுக்காக ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளை நாடும் விவசாயிகள் மத்தியில், முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்து அதிகம் மகசூல் ஈட்டி வருகிறார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆலங்குளம் கிராமம். பெரும்பாலும் வறட்சி நிலவும் இப்பகுதியில், குருசாமி என்னும் விவசாயி மட்டும் 10 ஏக்கர் பரப்பளவிலான தனது தோட்டத்தை பசுமை குறையாமல் பராமரித்து வருகிறார்.
imageமுழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், ஜி.டி.நாயுடு, நம்மாழ்வார் ஆகியோரை பார்த்து இயற்கை விவசாயத்தின் பால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.
அதிக நீரை வீணாக்காமல் சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சி, தென்னை, வாழை, மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, பப்பாளி, சீதாப்பழம், கற்றாழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். இவை அத்தனையும் ஆளுயரத்திற்கும் குறைவான இன ஒட்டு மரங்களில் அதிக மகசூலை தருகின்றன.
அதிக மகசூலுக்காகவும், பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் பஞ்சகவ்யம், தொழு உரம், தழைச்சத்து ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். ஒவ்வொரு செடியின் அடியிலும், கொட்டிக் கிடக்கும் ஆட்டு எருவும், செடியின் மேல் தழைத்து குலுங்கும் காய்களுமே இதற்கு சாட்சியாக அமைகின்றன.
சரியான திட்டமிடலும், முறையான பராமரிப்பும் இருந்தால் செயற்கை விவசாய முறைகளை மிஞ்சிய, மகசூலை இயற்கை விவசாயத்திலேயே பெறலாம் என்கிறார் விவசாயி குருசாமி.
உயிருக்கு கேடு விளைவிக்கும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகளை தவிர்த்து, முழுமுனைப்புடன் ஈடுபட்டால் இயற்கை விவசாயத்திலும் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பதற்கு, விவசாயி குருசாமி தான் சான்று.
English Summary
10 acre agri land with traditional cultivation