வினோத வழக்கம்! பாரம்பரியத்தை பின்பற்ற இரு சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்த அதிர்ச்சி சம்பவம்...!
Strange custom Shocking incident where two brothers married one woman to follow tradition
இமாச்சல பிரதேச மாநிலத்தில் சர்மூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ்-கிரி என்ற பகுதியில் வசித்து வரும் ஹாட்டி சமூகத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இதில் ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி என்ற சகோதரர்கள், அருகிலுள்ள குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணை, குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் முழு சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி கல்யாணம் செய்து கொண்டனர்.
இதில் ஹாட்டி சமூகத்தில் "ஜோடிதரன்" அல்லது "திரௌபதி பிரதா" என்று அறியப்படும் இந்த பலதார திருமண வழக்கம், பொதுவாக ரகசியமாகப் பின்பற்றப்பட்டாலும், இந்த திருமணம் ஊரார் அறிய பிரமாண்டமாக நடந்துள்ளது.இந்த வழக்கமானது குடும்ப ஒற்றுமையைப் பேணுவதற்கும், மூதாதையர் நிலத்தைப் பிரிப்பதைத் தடுப்பதற்கும், பெண்கள் விதவையாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் பின்பற்றப்படுகிறது.
மேலும், சகோதரர்களில் ஒருவரான பிரதீப் ஜல் சக்தி துறையிலும், கபில் வெளிநாட்டிலும் பணிபுரிகின்றனர். இதுகுறித்து இருவரும் தங்கள் முடிவை பரஸ்பரமானது என்றும், தங்கள் வரலாற்றைப் பற்றி பெருமைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி,மணமகள் சுனிதா தெரிவித்ததாவது, "இது எனது தேர்வு. நான் ஒருபோதும் வற்புறுத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.சம்பிரதாயங்கள் நிறைந்த, 3 தினங்களாக நடைபெற்ற இந்த திருமண விழாவில், அண்டை கிராமங்களைச் சேர்ந்த மக்களும் உறவினர்களும் பங்கேற்று, பாரம்பரிய பஹாரி நாட்டுப்புற இசையுடன் நடனமாடி, மணமக்களை வாழ்த்தினர்.
English Summary
Strange custom Shocking incident where two brothers married one woman to follow tradition