திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியா? விஜய் போட்டு வைத்த கணக்கு என்ன? தவெக வட்டாரங்களில் பரவும் தகவல்!
Will Raghava Lawrence contest the Trichy East by election What is Vijay calculation Buzz circulating within TVK circles
தமிழக அரசியலில் தற்போது அதிக கவனம் பெறும் விவகாரமாக திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த தொகுதி என்பதால், இந்தத் தேர்தல் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கவுரவப் போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் பெயர் தவெக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், பின்னர் பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு விஜய் ஆரம்பத்திலிருந்தே தனி முக்கியத்துவம் அளித்து வந்தார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு நன்றி தெரிவிக்க முதலில் சென்ற தொகுதியும் இதுவே. அப்போது பேசிய அவர், “இந்தத் தொகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது” என்று குறிப்பிட்டதோடு, இங்குள்ள மக்களிடமிருந்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சில உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் அடிபட்டன. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் பெயர் தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பல்வேறு துறைகளில் அறியப்படும் லாரன்ஸ், கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள் உள்ளிட்ட சமூகப் பணிகளின் மூலம் மக்களிடையே தனித்த செல்வாக்கைப் பெற்றுள்ளார்.
மேலும், விஜயுடன் நீண்டகால நட்புறவு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலருக்கு அரசியல் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், லாரன்ஸுக்கும் முக்கிய பொறுப்பு அல்லது தேர்தல் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
இதற்கிடையில், சமூக வலைதளத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட சமீபத்திய பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. தன்னைப் பற்றிய அரசியல் செய்திகள் பரவி வருவதாகவும், விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தாயின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையின் முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக அவர் தெரிவித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அந்த அறிவிப்பு அரசியல் தொடர்பானதா, தவெகவில் இணைவது குறித்ததா அல்லது திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பானதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மறுபுறம், ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக அறியப்படும் லாரன்ஸ், நேரடியாக அரசியலில் குதிப்பாரா என்பதிலும் விவாதம் நீடிக்கிறது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல், ஆட்சிக்கு வந்த பிறகு தவெக அரசின் மீதான மக்கள் மனநிலையை அளவிடும் முக்கிய தேர்தலாகக் கருதப்படுகிறது. அதனால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள, மக்கள் செல்வாக்கு கொண்ட வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தவெக தலைமை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனினும், ராகவா லாரன்ஸ் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அவரது அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Will Raghava Lawrence contest the Trichy East by election What is Vijay calculation Buzz circulating within TVK circles