யார் அந்தப் புதிய எம்.பி...? ஜூன் 18-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்...! - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு...!
Who that new MP Rajya Sabha by elections on June 18 Election Commission important announcement
தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சி.வி. சண்முகம், அ.தி.மு.க சார்பில் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அதே நேரத்தில் அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்ததால், ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்ற இந்திய அரசியலமைப்பு விதி அமலுக்கு வந்தது.

இதனையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்த சி.வி. சண்முகம், தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரும் இந்திய குடியரசின் துணைத்தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களிடம் நேரில் வழங்கினார்.பின்னர், மாநிலங்களவை செயலகம் ராஜினாமா கடிதத்தை ஆய்வு செய்து, அது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தது.
மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகியுள்ள தகவல் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழலில், காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், ஜூன் 1ஆம் தேதி முதல் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஜூன் 8ஆம் தேதி என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 11ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஜூன் 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
Who that new MP Rajya Sabha by elections on June 18 Election Commission important announcement