தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே...? - முதல்வருக்கு விஜய் கடும் கேள்வி
Where women safety in Tamil Nadu Vijay Poses Stern Question Chief Minister
தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் குறித்து கவலை தெரிவித்து, த.வெ.க. தலைவர் விஜய் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாநிலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் போராட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் தவித்துக்கொண்டு, மறுநாள் காலை பல கிலோமீட்டர்கள் நடந்தே காவல் நிலையத்தை அடைந்த சம்பவமும் சமூக மனசாட்சியை உலுக்கும் ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சிறுமி கொலை சம்பவம், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் தாக்குதல்கள், நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது போன்ற பல சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மானாமதுரையில் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம், சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவம், கிருஷ்ணகிரியில் முதியவர் கொலை செய்யப்பட்டதுடன் அவரது மனைவிக்கு நடந்த கொடுமை போன்ற நிகழ்வுகளும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பெரும் கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சென்னை திரிசூலத்தில் நடந்த இரட்டைக் கொலை, கோவையில் அரசு பள்ளியில் உணவு பாதுகாப்பு குறைபாடு காரணமாக பல மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், மேலும் அரசியல் தலைவர்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடைபெற்றது போன்ற பல சம்பவங்களும் கடந்த ஒன்றரை வார காலத்தில் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்துச் சம்பவங்களும் தமிழக மக்களின் மனதில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளன. இவ்வளவு குற்றச்செயல்கள் குறுகிய காலத்திலேயே நிகழ்ந்திருக்கையில், இந்த ஆட்சியின் முழு காலத்தை கணக்கிட்டால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அரசின் அடிப்படை பொறுப்பு என்றும், அது நிறைவேற்றப்படாமல் இருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதியாக காக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய ஆட்சிக்கு மக்கள் எதிர்வினை அளிக்கும் காலம் நெருங்கி வருவதாகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Where women safety in Tamil Nadu Vijay Poses Stern Question Chief Minister