ஆதாரங்கள் எங்கே...? ஆதாரங்களை ஒப்படைக்க சொல்லி டிஜிபிக்கு கடும் உத்தரவு! - நேரு வழக்கில் பரபரப்பு
Where evidence stern order issued DGP hand over evidence Sensational developments Nehru case
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாளர் நியமனங்களில் பல நூறு கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கைமாறியதாக வந்த புகாரை, தேவையான ஆதாரங்களுடன் மத்திய அமலாக்கத் துறை தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்ய கோரியிருந்தது.
ஆனால் இதுவரை தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அ.தி.மு.க. எம்பி ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் மீது தற்போது முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது” என விளக்கம் அளித்தார். இதற்கு கடும் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, “அப்படியென்றால் இதுவரை ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை?” என அரசுத் தரப்பை நேரடியாகக் கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, “இந்த மனு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என வாதிட்டது. உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், “அரசியல் நோக்கம் குறித்து நாம் கவலைப்படுவதில்லை.
வழக்கின் தன்மை மற்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையே பார்க்கிறோம். இந்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இப்போதே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட எங்களுக்கு அதிகாரம் உள்ளது” எனக் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
எனினும், அரசுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டுமென கருதி, வரும் 28-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை டி.ஜி.பி.-க்கு அனுப்பிய அனைத்து ஆதாரங்களையும் அதே தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஆணையிட்டனர்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
English Summary
Where evidence stern order issued DGP hand over evidence Sensational developments Nehru case