சுட்டிக்காட்டிய அறப்போர் இயக்கம் - உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்ட திமுக அமைச்சர்!
Vikravandi hotel issue tn govt order
விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட உணவகம், பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கி வருவதாக, அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட அந்த உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமத்தை ரத்து செய்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று தமிழக அரசு தரப்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "அண்மைக்காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு புகார் வந்தது.
வரப்பெற்ற அந்த புகாரின் அடிப்படையில், அமைச்சரின் உத்தரவின்படி சாலையோர உணவகங்களின் செயல்பாட்டினை கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்களால், தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜனவரி 19-ம் தேதியன்று போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் தீடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது, விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியதை கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில், அங்கீகரிக்கப்பட்ட சாலையோர பிற உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டால், அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
English Summary
Vikravandi hotel issue tn govt order