வேலியே பயிரை மேய்ந்தது.. அதிர்ச்சியில் விஜயகாந்த்.!!
vijayakanth statement for school students
மாணவ செல்வங்களுக்கு எதிராக நடைபெறும் அவலங்களை தடுக்காமல் தமிழக பள்ளிக்கல்வித்துறை தூங்குகிறதா.? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை முள்ளம்பட்டியில் உள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் பிஞ்சு குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
நோட்டு புத்தகம் ஏந்த வேண்டிய மாணவ செல்வங்களின் கைகளில் துடப்பக்கட்டை இருப்பதை கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய ஊழியர்களை நியமிக்காமல் மாணவ மாணவிகளை வைத்து சுத்தம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
மாணவர்கள் பள்ளிக்கு வந்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே, மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மாணவர்கள் பள்ளியில் வேலை வாங்கப்படுவதால் தலைவர்கள் கண்ட கனவு கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர்களை தவிர்த்து, ஆசிரியர்களே இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளாமல், மாணவர்களை கட்டாயப்படுத்துவது கண்டிக்கதக்கது, வருந்ததக்கது.
மாணவ செல்வங்களுக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற அவலங்களை தடுக்காமல் தமிழக பள்ளிக்கல்வித் துறை என்ன தூங்குகிறதா? மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில் அதிகாரிகளை கொண்ட குழுவை நியமித்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். வேலியே பயிரை மேய்ந்தது போல, ஆசிரியர் பெருமக்களே மாணவர்களை இதுபோன்று கொடுமைப்படுத்துவது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.
English Summary
vijayakanth statement for school students