"ஒருநாளாவது, ஒருபொழுதாவது எனக்கு விடியும்" கண்ணீர் மல்க பேசிய விஜயகாந்த்.!
vijayakanth speech in trippur
திருப்பூர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சி பதினைந்தாம் ஆண்டு தொடக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா காங்கேயம் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முத்து வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இவர் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆவார். இதனை மத்திய பகுதி செயலாளர் பார்த்திபன் வரவேற்றார்.
விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜயகாந்த், "அனைவருக்கும் வணக்கம். ஒரு நாளாவது, ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்த்க்கு விடியும். அப்பொழுது நமது தமிழக மக்களை நான் தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை வரும்போது உங்களிடம் நான் ஒரு மணி நேரம் பேசுவேன்.
இது போல தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரமாக அனைவரும் வீட்டிற்கு செல்லுங்கள் என அவர் பேசினார்.
இந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜய பிரபாகரன், அவை தலைவர் இளங்கோவன் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
vijayakanth speech in trippur