விஜய் கரூர் பயணம் ஒத்திவைப்பு! விஜய் கரூருக்கு செல்வது எப்போது? – உளவுத்துறை கைக்கு போன ரிப்போர்ட்.. கன்பாஃர்ம் ஆன தேதி இது தான்!
Vijay Karur trip postponed When will Vijay go to Karur Intelligence report received This is the confirmed date
கரூரில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க திட்டமிட்டிருந்த நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கரூர் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலில், அக்டோபர் 17ஆம் தேதி விஜய் கரூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சி இடத் தீர்மானம் மற்றும் நிர்வாக அனுமதி தொடர்பான சிக்கல்கள் காரணமாக, விஜய்யின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நோக்கில் விஜய் கரூர் பயணத்தை திட்டமிட்டிருந்தார்.
தவெக நிர்வாகிகள் இதற்காக டிஜிபி அலுவலகத்திலும், கரூர் எஸ்.பி அலுவலகத்திலும் மனு அளித்து அனுமதி கோரியிருந்தனர். நிகழ்ச்சி கரூர்–ஈரோடு சாலையில் உள்ள கேஆர்வி மெரிடியன் ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த ஹோட்டல் முந்தைய கூட்டம் நடந்த இடத்திற்கு மிக அருகில் இருப்பதால், போலீசார் மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர்.
இதற்கிடையில், விஜய் வருகை குறித்து தகவல் பரவியதும், கரூரில் பெரும் ரசிகர் திரள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இட ஒதுக்கீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில ஹோட்டல் மற்றும் மண்டப உரிமையாளர்கள் அரசியல் அழுத்தம், பாதுகாப்பு பிரச்சினைகள் எனக் கூறி இடத்தை வழங்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், விஜய்யின் கரூர் பயணத்திற்கான இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிவடைந்த பின் விஜய் கரூருக்கு வருவார் என தெரிவிக்கப்படுகிறது. போலீஸ் வட்டாரங்கள் கூறுவதாவது, தீபாவளிக்குப் பிறகு, இம்மாத இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் விஜய் கரூருக்கு வரலாம் என்பதாகும்.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய், உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், விஜய் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் நேரடியாக பேசிச் சமாதானப்படுத்தியதும், பிறகு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
விழுந்த உயிர்கள் குறித்து துயரம் வெளிப்படுத்திய விஜய், அந்த குடும்பங்களை நேரில் சந்திக்க உறுதி தெரிவித்துள்ளதால், அவர் கரூர் வருகை மீண்டும் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Vijay Karur trip postponed When will Vijay go to Karur Intelligence report received This is the confirmed date