மேகேதாட்டு அணை விவகாரம்; கர்நாடக காங்கிரஸுக்கு ஆலோசனை வழங்க விஜய் செய்ய வேண்டியது இதுதான்; வேல்முருகன் யோசனை..!
Velmurugan offers suggestions to Chief Minister Vijay regarding the Mekedatu dam issue
மேகேதாட்டு அணை கட்டுமானம் தொடர்பில், கர்நாடக காங்கிரஸுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்க சோனியா காந்தி, ராகுல் காந்தியை தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய்க்கு யோசனை முன்வைத்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது;
''காவிரி ஆறு 14 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் 14 மாவட்டங்களின் வேளாண்மையும், ஏறத்தாழ 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இதனை தமிழக அரசு எதிர்த்து வருகிறது.

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்துக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவருமான ராகுல் காந்தியும் இதில் முயற்சிகள் மேற்கொள்ள தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.
கர்நாடக காங்கிரஸுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்க சோனியா காந்தி, ராகுல் காந்தியை தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Velmurugan offers suggestions to Chief Minister Vijay regarding the Mekedatu dam issue