''திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநரின் செயல்"; தவாக வேல்முருகன் கண்டனம்..!
Velmurugan condemns the Governors action as an act that undermines the cultural identity of Tamils
''திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநரின் செயலைக் கண்டிக்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
''வைகாசி அனுசம் என்றப் பெயரில், தமிழர்களின் உலகப் பொதுமறைத் தந்தை திருவள்ளுவரை மத, அரசியல் அடையாளங்களுக்குள் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் காவி நிற ஆடையணிந்தத் தோற்றத்தில் சித்தரித்து நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் சிந்தனைக்கும் சொந்தமானவர் அல்லர். அவர் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறவழிக் குரலாக விளங்குபவர். அத்தகையத் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் அடையாளமாக மாற்ற முயல்வது தமிழர் வரலாறு, பண்பாடு மற்றும் அறிவு மரபின் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதலாகும்.
ஏற்கனவே தமிழ்நாட்டின் அரசியல், கல்வி, மொழி, பண்பாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையீடு செய்து சர்ச்சைகளை உருவாக்கி வரும் ஆளுநர், இப்போது திருவள்ளுவரின் உருவத்தையே மாற்றி தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளங்களை மாற்றி அமைக்கும் எந்த முயற்சியும் அனுமதிக்க முடியாது.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகசா செயல்படும் ஆளுநர் உடனடியாக இந்த நடவடிக்கைக்காகத் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இனி இதுபோன்ற பண்பாட்டு அத்துமீறல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதியையும் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தைச் சாதாரணமாகக் கருதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழர்களின் பண்பாட்டு உரிமைகள் மற்றும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே தமிழ்நாடு அரசு இந்தச் செயலை அதிகாரப்பூர்வமாகக் கண்டித்து தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். மேலும், மாநிலத்தின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் எந்த நபராக இருந்தாலும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும் அதற்கான அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தமிழர்களின் பெருமைமிகு அடையாளமான திருவள்ளுவரை அரசியல் வண்ணம் பூசிச் சிதைக்கும் எந்த முயற்சியையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Velmurugan condemns the Governors action as an act that undermines the cultural identity of Tamils