'உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து; தமிழ்நாட்டிலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சி'; வேல்முருகன் குற்றச்சாட்டு..!
Velmurugan alleges that Higher Education Minister Viswanathan comments are an attempt to establish federalism in Tamil Nadu as well
''ஆளுநருடன் மோதல் போக்கை விரும்பவில்லை. விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆளுநரும் முதல்வரும் அற்புதமான புரிதலுடன் பணியாற்றுகின்றனர்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் கருத்துக்கு
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எதிர்வினையாற்றியுள்ளார்.
அதாவது, ''தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இணைந்து தமிழ்நாட்டிலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சியின் முன்னோட்டமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து அமைந்துள்ளது'' என வேல்முருகன் குற்றம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி உரிமையை பறிக்கும் முயற்சியின் முன்னோட்டமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசை எப்படியாவது தேசிய கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ரகசிய கூட்டணி அமைத்து, மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், “துணைவேந்தர்கள் தேடல் குழுவில் 3 பேர் இருக்க வேண்டும் என அரசு கூறி வந்தது. பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியையும் சேர்த்து 4 பேராக உயர்த்த வேண்டும் என்று முந்தைய ஆளுநர் கூறினார். இப்போது பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து 5 உறுப்பினர்களாக அதிகரிக்கலாம் என்று ஆளுநருக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டால் சிக்கல் தீர்ந்துவிடும். அதன்பின் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றார்.

“பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்த வழக்குகளின் இறுதி விசாரணை வரும் 29-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
தேடல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3லிருந்து 5ஆக உயர்த்துவது தேவையற்றது. மேலும் இது சட்டத்தை மீறிய செயல். பல்கலைக்கழக சட்டங்களின்படி துணைவேந்தர் தேடல் குழுவில் அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி ஆகிய மூவரை மட்டுமே சேர்க்க வகை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் உள்ளிட்ட வேறு உறுப்பினர்களைச் சேர்ப்பது சட்டவிரோதம்.

இவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினால் அது பல்கலைக்கழக சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படும். அந்த வழக்குகளின் விசாரணை முடிவடைய பல ஆண்டுகள் ஆகலாம். அது வரை பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க முடியாத நிலை உருவாகும். அப்படியொரு நிலையை அரசே ஏற்படுத்தக் கூடாது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், “கடந்த காலத்தில் ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைபிடித்தனர். நாங்கள் மோதல் போக்கை விரும்பவில்லை. விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆளுநரும் முதல்வரும் அற்புதமான புரிதலுடன் பணியாற்றுகின்றனர்” என்று கூறினார்.
தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இணைந்து தமிழ்நாட்டிலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சியின் முன்னோட்டமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து அமைந்துள்ளது என குற்றம் சாட்டுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Velmurugan alleges that Higher Education Minister Viswanathan comments are an attempt to establish federalism in Tamil Nadu as well