''அமைச்சர் கீர்த்தனா அராஜக போக்கு தமிழகத்துக்கே தலைகுனிவு''; கீதாஜீவன் கண்டனம்..!
Geethajeevan condemned Minister Keerthana anarchic tendencies as a disgrace to Tamil Nadu
''எந்த குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார்களோ, அந்த பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலில் தவெக அரசு இறங்கி உள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது'' என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜக போக்குடன் கேள்வி கேட்டு, ஆசிரியர்களையும் அதட்டும் தொனியில் நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது.
அரசுப் பள்ளி ஒன்றில் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம் போட்டு மாண்பை சீர்குலைத்த நிலையில், அரசுப் பள்ளி குழந்தையை கேள்விகளின் மூலம் கூனிக் குறுக வைத்து அந்த வீடியோவை பரப்பி மனிதத் தன்மையற்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா.
குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் அவர்களை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் அமைச்சர் நடந்துகொண்டிருப்பது அருவருக்கதக்க செயல்.
அதுமட்டுமில்லாமல், ‘லாஸ்ட் பெஞ்ச்’ குழந்தைகள் நன்றாக படிக்க மாட்டார்கள் என்கிற பிற்போக்குத்தனமான சினிமா வசனங்களை பேசி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறார். ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தெரியாதவர்கள் தான் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு.
எந்த குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார்களோ, அந்த பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலில் தவெக அரசு இறங்கி உள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Geethajeevan condemned Minister Keerthana anarchic tendencies as a disgrace to Tamil Nadu