சர்ச்சையான பதிவிட்ட திமுக எம்பி செந்தில்குமார், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்! வன்னியர் சங்க செயலாளர் வைத்தி எச்சரிக்கை!
Vanniyar sanga secretary vaithi warn DMK MP senthilkumar
திமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அவர் கடந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட மருத்துவர் அன்புமணிக்கு எதிராக கடுமையான பிரசாரம் செய்தார். அப்போது நான் வடிவேல் கவுண்டரின் பேரன், அன்புமணியின் சமுதாயத்தைச் சேர்ந்தவன் தான் என தேர்தல் முடியும் வரை சமுதாயம் பெயரை சொல்லி வாக்கு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிந்த பதிவு ஒன்று புதிய சர்ச்சை ஒன்றினை உருவாக்கியுள்ளது. அடிக்கடி அவர் சர்ச்சையில் சிக்குவதும் பின்னர் வருத்தம் தெரிவிப்பதும் வாடிக்கை தான், இருந்தாலும் இந்த பதிவு எந்த சமுதாயத்தின் பெயரை சொல்லி வாக்கு கேட்டாரோ அதே சமுதாயத்தை களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளது என கண்டன குரல்கள் எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் இணையம் வழியான கூட்டத்தில் கலந்து உரையாடும்போது, நானும் இந்த சமூகத்தின் மீது பற்று உள்ளவர் தான் என கூறியதோடு இல்லாமல், தன் கையில் வன்னிய சமுதாயத்தின் அடையாளமாக பார்க்கப்படும் அக்னி கலசத்தினை பச்சை குத்தியிருப்பதை அனைவருக்கும் காட்டினார்.
இந்த படத்தினை எடுத்து பதிவிட்ட தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில், சாதிமறுப்பு சமூகநீதி கொள்கைகளை பெற்றோர் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் மனதில் உள்ள "அசுத்தம்" இப்படித்தான் ஒருநாள் இவ்வளவு பெரிய தளும்பா வரும் என்று கூறியுள்ளார். வன்னியர் சமுதாயத்தின் அடையாளமாகவே பார்க்கப்படும் அக்னி கலசத்தினை களங்கப்படுத்தியதை அடுத்து, அவருக்கு அவருடைய பதிவிலேயே கடுமையான கண்டனங்கள் வன்னியர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வன்னியர்களை களங்கப்படுத்திய திமுக எம்பி மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா? திமுக எம்பி மன்னிப்பு கேட்பாரா என கேள்வியெழுப்பியுள்ளார்கள்.
இந்த நிலையில் வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி, எம்பி செந்தில்குமாருக்கு எச்சரிக்கை என முகநூலில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், ""நம் குலதெய்வம்" மருத்துவர் அய்யா அவர்கள் இது தான் நமது அடையாளம் என ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் காட்டிய "அக்னி கலசத்தையும், "இளைஞர்களின் எதிர்காலம்" அண்ணன் சின்ன அய்யா அவர்களையும் கலங்கப்படுத்தி பதிவிட்ட திமுக-வைச் சேர்ந்த தருமபுரி.செந்தில்குமாரை கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்லாமல் கடுமையாக எச்சரிக்கிறோம்.
இனி இதுபோன்று வன்னியர்களைப் பற்றியோ,எங்களின் தலைவர்கள் பற்றியோ கலங்கப்படுத்தி சமூக வளைதலங்களில் ஏதேனும் பதிவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும். இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது. இல்லையேல் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்!!" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Vanniyar sanga secretary vaithi warn DMK MP senthilkumar