உலக மாற்றுத்திறனாளிகள் நாள் : வைகோ வெளியிட்ட வாழ்த்து செய்தி.!!
vaiko statement on dec 02
உலக மாற்றுத்திறனாளிகளின் நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலத்தால் கைவிடப்பட்டவர்களாக, நிம்மதி வேண்டிச் சாய்வதற்குத் தோள்களைத் தேடும் மாற்றுத் திறனாளிகள், சாதிக்கப் பிறந்தவர்கள்.
சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ்வதற்கு வழியில் இருக்கின்ற தடைக்கற்களை அகற்றிட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளியான ஹெலன் கெல்லர் அம்மையார், நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் வாழ்ந்து காட்டினார். “என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடினும், என்னாலும் சிலவற்றை செய்ய முடியும்” என்றார் ஹெலன் கெல்லர்.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்நாள் நெடுகிலும், வேதனையில் உழல்கின்றார்கள். நாகரிகம் வளர்ந்து விட்ட, இந்த 21-ஆம் நூற்றாண்டிலும், மாற்றுத்திறனாளிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வருவது வருத்தத்துக்கு உரியது.
23 ஆண்டுகளுக்கு முன்பு, உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றம் என்ற அமைப்பை நிறுவி, சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு, திருப்பதி தேவஸ்தானம் பாலாஜி மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் மூலமாக அறுவை மருத்துவம் செய்து, மருத்துவக் கருவிகளை வழங்கி, மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்தேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகளை, மத்திய மாநில அரசுகள் இலவசமாக வழங்கி வருகின்றன. அத்தகைய அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான கருவிகளைப் பெற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி இருக்கின்றேன். இன்றளவும் இடைவிடாது அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன். மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் தோள் கொடுப்போம்; அவர்களுக்குத் துணை நிற்போம். உலக மாற்றுத் திறனாளிகள் நாளில் (03.12.2021) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
English Summary
vaiko statement on dec 02