தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!
urudu teacher case tngovt chennai hc
சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததையும், அதனை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் பள்ளியில் உருது ஆசிரியர் பணிக்கு ஹாஜிரா என்பவர் 2022-ல் நியமிக்கப்பட்டார். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை என்ற காரணத்தால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நியமன ஒப்புதலை மறுத்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர, உயர்நீதிமன்றம் “சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு விதி பொருந்தாது” என தீர்ப்பளித்து, ஹாஜிரா நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கே.சுரேந்தர் ஆகியோர் விசாரித்தபோது, இதேபோன்ற முன்னோடி வழக்குகளில் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே தீர்ப்பு வந்துள்ள விஷயத்தில் மீண்டும் அரசு மேல்முறையீடு செய்ததையைக் கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த தொகை நான்கு வாரத்துக்குள் பள்ளிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதைத் தவறான உத்தரவு பிறப்பித்த அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
English Summary
urudu teacher case tngovt chennai hc