பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை... மக்களைவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்..!!
union minister says about pallikaranai wetland
பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபே மக்களவையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபே, இந்தியா முழுவதிலும் இதுவரையில் 46 சதுப்பு நிலக் காடுகள் ராம்சர் ஒப்பந்தத்தின்படி கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கோடியக்கரை பறவைகள் சரணாலயம் இந்த ஒப்பந்தத்தின்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கான திட்ட வரைவு இந்த மாதத்தில் மத்திய அரசின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் தேசிய சட்டத்தின் கீழ் 2.78 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் இணை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்தார்.
மேலும் சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும், மாநில சுற்றுச்சூழல் துறை தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, குப்பை கொட்டும் இடங்களை மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் உதவியுடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளும் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.
ஈர நிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடா்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம்தான் ‘ராம்சா்’ சாசனம் என்பதாகும். இது ஈர நிலங்களுக்கான சாசனம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. 1971-இல் ஈரானில் உள்ள ‘ராம்சா்’ என்னும் நகரில் இந்த ஒப்பந்தம் கையொப்பமைாகியது. இந்த நகரின் பெயரைத் தழுவியே ‘ராம்சா்’ சாசனம் என்னும் பெயா் ஏற்பட்டது. மனித வாழ்வுக்கு மிக முக்கியமான ஈர நிலங்கள் உலகின் அதிகமாக ஆக்கத் திறன் கொண்ட சூழல்களுக்குள் இருக்கும். கணக்கிடமுடியாத தாவர, விலங்கினங்களின் வாழ்வுக்காக நீரையும் பிற வளங்களையும் வழங்கும் உயிரியல் தொட்டிலாக உள்ள இந்த நிலங்களை பாதுகாக்கவே ராம்சர் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
union minister says about pallikaranai wetland