நீதி கோரி தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட தேதி மாற்றம்! காரணம் என்ன?!
TVK protest date change
திருப்புவனத்தில் காவல் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமாருக்கு நீதி கோரி தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம், தேதி மற்றும் இட மாற்றத்துடன் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஏற்கனவே ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் விடுத்துள்ள அறிவிப்பில், "சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் விஜய்யின் உத்தரவின்பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம், அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சென்னை, சிவானந்தா சாலையில்) 06.07.2025 ஞாயிறு அன்று காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.