சகதி வீசுவதை சரி என்கிறீர்களா அண்ணா? திருமாவளவனுக்கு எம்எல்ஏ முஸ்தபா கடும் கண்டனம்!
tvk mla musthapa condemn to vck thirumavalavan
தவெக எம்எல்ஏ முஸ்தபா விடுத்துள்ள அறிக்கையில், "அன்பின் திருவுருவம் அறிவின் மறு உருவம் என்று பெயர் பெற்ற அண்ணன் திரு. தொல்.திருமா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பையும் அறிவையும் மழையாகப் பொழியும் நீங்கள் மரபு குறித்தும் மாண்பு குறித்தும் பாடம் எடுக்கத் தகுதியானவரே. மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. மாச்சர்யமோ ஆச்சர்யமோ கொள்ள மனமில்லை. அடராழ் அரசியல் பயணம் உங்களுடையது. அது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால், அண்ணா…நீங்கள், வாளும் வார்த்தையும் வீச வேண்டிய திசை எது என்று அறியாமல் திகைத்து நிற்பது ஏன் அண்ணா?.
சட்டசபையில் Evil குறித்துப் பேசியது உலகத்தின் காதுகளிலேயே விழுந்தது. உங்கள் காதுகளை அது எட்டவில்லையே. ஏன் அண்ணா?.
தற்குறி என்றெல்லாம் சபைக்கு வரும் வெளிவாயிலில் நின்று வன்ம கோஷம் பாடியது வாழ்த்துக்குரிய செயல் என்று எண்ணிவிட்டீர்களோ அண்ணா?.
வாயத் தொறங்க சி.எம் என்று அட்டை ஏந்தி நின்றதை அரசியல் அறமென்று எண்ணி விட்டீர்களோ அண்ணா?.
வக்கற்றவர் என்று முதல்வர் மீது வஞ்சம் கொண்டு வசை பாடியது உங்களுக்கு வாஞ்சை மொழியாகத் தெரிகிறதா அண்ணா?.
ஷோஃபா மாடல் என்று சுத்தப் பொய்ச் சூத்திரம் சொல்லி உங்களையும் அந்த அவதூறுப் பட்டியலில் சேர்த்தது அகமகிழச் செய்யும் செயலா அண்ணா?.
எங்கள் தயவில் ஆட்சி நடத்துகிறீர்கள். எங்கள் வாக்குகளில் ஆட்சி நடத்துகிறீர்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இதுவும் எங்கள் ஆட்சிதான் என்று எகத்தாளம் பேசியது அரசியல் மாண்பின் இலக்கணமா அண்ணா?.
அறிவார்ந்த ஜனநாயக அரசியலா அண்ணா?.
புதிய இலக்கணப் புணர்ச்சி விதி கூறியவர்கள் எல்லாம் புத்தாக்க அரசியல் புரிதல் கொண்டவர்களா அண்ணா?.
65சதவீதம் பேர் எதிராக வாக்களித்தனர். ஆகவே, இந்த வெற்றி ஜனநாயகமற்றது எனபது போன்று மடமைப் பொங்கல் வைத்தது மகத்தான ஜனநாயகப் புரிதலா அண்ணா?.
ஆயிக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான உயிர்களின் வாழ்வாதாரமான ஒரு தொழிலை அவமானகரமாக ஆக்கிப் பேசியது அறம்நிறைந்த அரசியலா அண்ணா?.
அயிட்டம் சாங் போட்டாலும் போடுவார்கள் என்று பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது கொள்கை அரசியலா அண்ணா?.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக எதற்கெடுத்தாலும் எங்கள் தலைவர் தயவால் ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பொறாமையில் பொய் சொன்னால் ‘எங்கே அவர்?’ என்று கேட்பது இயல்புநிலை இல்லையா அண்ணா?.
சாமானியர்களின் சமூக நீதி அரசின் மீது சகதி வீசுவதை சரி என்கிறீர்களா அண்ணா?.
ஜனநாயகம் காக்கும் சக்திகளைச் சகட்டுமேனிக்குச் சங்கடப்படுத்திப் பேசுவது சங்கத்தமிழ் அரசியல் மரபா அண்ணா?.
பிளாஸ்டிக் சேர் போட்டவர்களின் பிளாஸ்டிக் அரசியல் பிதற்றலை இன்னுமா உணரவில்லை அண்ணா?.
எல்லை தாண்டி விமர்சிப்பவர்களை, ஏசுபவர்களை, ஏகடியம் பேசுபவர்களை, உச்சமாக ஏளனம் செய்பவர்களை குறிப்பால் உணர வைப்பதுகூட குற்றமா அண்ணா?.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதுதான் தத்துவ அரசியலா அண்ணா?.
தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்றாலும் தானாகத் தேடிச் சென்ற மனதை தாங்கள் அறியாமல் இருப்பது ஏன் அண்ணா?.
பெற்றோர் வைத்த பெயரைச் சொல்லிவிட்டு, பட்டப்பெயரைச் சொல்லாமல் விட்டதற்காக வருந்திய உள்ளத்தை நீங்கள் வருத்தப்படுத்தியது ஏன் அண்ணா?.
மாண்பு காக்கும் மரபார்ந்த சபையில், தன் மீது ‘ஏய்’ என்று ஒருமையில் வாய்க்கொழுப்பில் சொல்லெறிந்த போதும் அமைதியாகப் புன்சிரிப்பை உதிர்த்தபடி நின்ற உள்ளத்தின் மீது உக்கிரமான சொல் எறிய உங்களுக்கு மனம் வந்தது எப்படி அண்ணா?.
‘வக்கற்ற’, ‘டம்மி’ என்றெல்லாம் வகைதொகை இல்லாமல் பேசுவோர் மீது ஒரு வார்த்தைக்கூட உதிர்க்காமல் இருப்பதுதான் அரசியல் உத்தமமா அண்ணா?.
ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் தாரக மந்திரம் என்று சொல்லும் நீங்கள் அதைச் சாத்தியப்படுத்திய ஜனநாயக உள்ளத்தின் மீது சகதி வீசுவோரைக் கண்டிக்காததுதான் சத்திய அரசியலா அண்ணா?.
‘எங்கள் கூட்டணியில் யாரும் இல்லை’ என்று திருமண வீடுகளில்கூட திட்டித் தீர்ப்பவர்களின் குரலாக எங்கள் மக்கள் தலைவர் ஆட்சியின் அங்கமாக பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் மரபார்ந்த பெருந்தன்மையா அண்ணா?.
மதிப்பிற்குரிய அண்ணா எது மரபு??
English Summary
tvk mla musthapa condemn to vck thirumavalavan