'பெரியார், அண்ணாவையும் கொச்சைப்படுத்துபவர்களை அக் கட்சித் தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள்': பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ள டி.ஆர்.பி.ராஜா..! - Seithipunal
Seithipunal


பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்துபவர்களை வேடிக்கை பார்க்கும் இவர்களை அவர்களின் கட்சித் தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள் என  எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 

தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தவொரு மனிதராக இருந்தாலும், மாநிலத்திற்கு நல்லது நடந்தால் அதைப் பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். தமிழ் மீது துளியும் அக்கறையில்லாத தமிழ் விரோதிகள்தான், மாநிலத்தின் சாதனைகளை பாராட்ட மனமின்றியும், அவற்றைக் கண்டு மனம் வெதும்பியும், ஏதாவது களங்கம் கற்பிக்க முடியுமா என்று சிந்தித்து, அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கடந்த சில வருடங்களாக அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கிறார். அவர் அரசியல் கூட்டாளியான பா.ஜ.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு, பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.

கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கிற்காகவும்தான் எடப்பாடி பழனிசாமி கோபமடைய வேண்டும், முருகன் பெயரில் பா.ஜ.க. நடத்திய அரசியல் கூட்டத்தில் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியைப் பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்த தன் கட்சி நிர்வாகிகள் மீது அவருக்கு கோபம் வரவில்லை.

இன்னமும் அவரது கட்சி அண்ணாவின் பெயரில்தான் இயங்குகிறதா இல்லையா? தமிழ்நாடு பெரியார் மண்-அண்ணா மண் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறாரா அல்லது இங்கேயும் காவிக் கூட்டத்தின் அராஜக செயல் தாண்டவமாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?

பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்துபவர்களை வேடிக்கை பார்க்கும் இவர்களை அவர்களின் கட்சித் தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள்.

சமீபத்தில், தி.மு.க.வின் ஐ.டி.விங், பா.ஜ.க.வின் துரோக முகத்தையும், நமது தமிழர்களின் பெருமைமிக்க பண்பாட்டுக் கருவூலமான கீழடி விவகாரத்திலும், மேலும் பலவற்றிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தமிழ் விரோத நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி, தக்க பதிலடி பதிலடி கொடுத்தது. தி.மு.க. ஐ.டி. விங்கின் பாய்ச்சலையும், அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் படுதோல்வியையும் எதிர்க்கட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆகையால், அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் அவதூறு பரப்பும் வேலையையும் அவரே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். முதலமைச்சரின் தலைமையிலான அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 2024-ல், அவர் அந்நிய நேரடி முதலீடு (FDI) எண்களைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அப்போதே நானும் அவருக்கும், அவரது கற்பனைத் திறனற்ற அடிமைப் படைக்கும் அந்நிய நேரடி முதலீட்டுத் தரவு தமிழ்நாட்டின் செயல்திறனை அளவிடுவதற்கான சரியான தரவு அல்ல என்று விளக்கமளித்திருந்தேன்.

இப்போதாவது இந்த எளிய உண்மையை புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் மீண்டும் கூறுகிறேன். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட தலைமையகங்கள் பிற மாநிலங்களில் உள்ளன.

மேலும், அந்த நிதி, அவற்றின் தலைமையகங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும். உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டை பல நிறுவனங்கள் முதலீடு செய்யவோ அல்லது மறுமுதலீடு செய்யவோ தேர்வு செய்திருந்தாலும், அவற்றின் பதிவு செய்யப்பட்ட தலைமையகங்கள் வேறு மாநிலங்களில் உள்ளன.

அந்நிய நேரடி முதலீடுகளைக் கணக்கிடுவதில் பல சிக்கல்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. எனவேதான் பொருளாதார நிபுணர்கள் அதை மாநிலத்தின் வளர்ச்சிக்கான சரியான குறியீடாக ஏற்றுக்கொள்வதில்லை. இத்தகைய நிலையிலும், தமிழ்நாடு இந்தியாவின் முதலீட்டில் தொடர்ந்து முதன்மை மாநிலமாக உள்ளதுடன், தொடர்ச்சியான வளர்ச்சியையும் கண்டு வருகிறது.

முதலமைச்சர் கூறியது போல, நமது நியாயமான முதலீடுகளைப் பிற மாநிலங்களுக்குத் திசை திருப்புவதில், குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் ஒன்றிய அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. அதற்காக தன் அதிகார பலத்தைப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன் கண்டன அறிக்கையை ஒன்றிய அரசை நோக்கி வெளியிடுவதே சரியானதாக இருக்கும்.

அ.தி.மு..கவின் 2016-2021 காலகட்டத்தில் 32 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றதாக அவர் கூறுகிறார். திராவிட மாடல் அரசு தனது ஆட்சிக்காலமான இந்த 4 ஆண்டுகளில், 310 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளையும், 31 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. அவரது கூற்றுப்படியே 2 இலட்சம் கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதை ஒப்புக்கொண்டாலும், எத்தனை சதவீதம் முதலீடாக மாறியது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

அவர் முதலீடாக மாற்றாமல் விட்டுச் சென்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், காழ்ப்புணர்வு காட்டாமல், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கான முதலீடுகளாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்து செயல்படுத்தி வருகிறது மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் தலைமையிலான அரசு. கடந்த நிதியாண்டில் 9.69% GSDP வளர்ச்சியுடன் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 6%க்கும்  குறைவாக இருந்தும், இந்தியாவின் உற்பத்தி GDP-யில் 11.9% பங்களிக்கிறோம்.

இந்த மக்கள்தொகையைத்தான் பா.ஜ.க. அரசு. நாடாளுமன்றத்தில் நியாயமற்ற மறுவரையறை மூலம் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறது. ஆனாலும், தனது அரசியல் எஜமானர்கள் தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிகள் குறித்து எதுவும் பேசாமல் எதிர்க்கட்சித் தலைவர் அமைதியாக இருக்கிறார்.

முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், EV, ஜவுளி, தோல் மற்றும் காலணி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 2021-22-ல், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நாம் வெறும் 1.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தோம். ஆனால், கடந்த ஆண்டு 14.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டினோம் - வெறும் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி!

இந்திய நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 21.8 விழுக்காடுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தோல் மற்றும் காலணி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 38 விழுக்காடு ஆகும். இந்தப் பொருட்களை இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த அளவுக்கு ஏற்றுமதி செய்வதில்லை.

மேலும், தென் தமிழ்நாடு ஒரு முக்கிய பசுமை ஆற்றல் மற்றும் ஆட்டோ மையமாக உருவெடுத்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஜாம்பவான்களான, விரைவில் திறக்கப்படவிருக்கும் Vinfast உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பெரும் முதலீடுகள் குவிந்து, பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை நாம் அடைந்து வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் TIDEL Neo பூங்காக்களைக் கட்டி வருகிறோம். இதில் பல ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகாலத்தில் அவர்கள் வெறும் 6-7 SIPCOT பூங்காக்களை மட்டுமே நிறுவினர். இந்த அரசாங்கத்தின் கீழ், நாம் 30- க்கும் மேற்பட்ட பூங்காக்களை நிறுவியுள்ளோம், மேலும் பலவற்றை நிறுவும் பணியில் இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே..

கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்க நீங்கள் 10 ஆண்டுகளாகத் தூங்கினீர்கள் கோயம்புத்தூருக்குத் தகுதியான விமான நிலையத்தை அளிக்க நமது முதலமைச்சர்தான் 2000 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்கினார். உங்கள் எஜமானரான பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் கூட நமது முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்குப் பெருந்தன்மை காட்டினார்.

ஆனால், மேற்கு தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் நன்றியுணர்வுடன் அதைப் பாராட்டக்கூட வேண்டாம். காழ்ப்புணர்ச்சியால் அவதூறு அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துங்கள்

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு அக்டோபர் 2024-ல் மட்டுமே அமைச்சரவையால் இறுதி ஒப்புதல் கிடைத்தது, மேலும் அதன் நிறைவுக்கான இலக்கு 2028 ஆகும். ஒன்றிய அரசு இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து நீங்கள் ஒரு கேள்வியாவது கேட்டிருக்கிறீர்களா?

முதலமைச்சர் அவர்கள் ஓசூர் மற்றும் ராமேஸ்வரத்தில் பெரிய விமான நிலையங்களை அறிவித்துள்ளார். இது அந்த பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை மிகப்பெரிய முதலீட்டு மையங்களாக மாற்றும். தஞ்சாவூரில் முதல் SIPCOT, தென்காசியில் முதல் SIPCOT, கன்னியாகுமரியில் முதல் TIDEL Neo ஆகியவை நமது முதலமைச்சர் உறுதி செய்த சில முதல் முயற்சிகளாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொடர்ந்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு அரசியலில் கவனம் பெற நினைக்கலாம். ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற்று, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும்.

மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் அளித்த நேர்காணலின் தரவுகளைக் கூட சரியாகப் புரிந்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடுகள் உள்ளிட்ட உள்ளிட்ட கோமாளிக் கூத்துகளால், உலகத்தில் எந்த நாடும் தமிழ்நாட்டுக்கு வரத் தயங்கியதையும், கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மேற்கொண்ட தொழில் வளர்ச்சியாலும், அதற்காக உருவாக்கிய கட்டமைப்புகளாலும் உலகின் பல நாடுகளும் தமிழ்நாட்டில் நாங்கள் முதலீடு செய்கிறோம் என ஆர்வம் காட்டி வருவதையும் அறியாததுபோல அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள்.

அமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாகவே அது பற்றி செய்தியாளரின் கேள்விக்கு விளக்கமளித்து பதிலடி கொடுத்திருப்பதால், தங்களின் அடுத்த அறிக்கையை தயாரிக்கும் நேரத்தில் அதனைக் காண வேண்டுகிறேன். விமர்சனங்களை வரவேற்று எதிர்கொள்கின்ற ஆற்றல் மிக்க முதலமைச்சராக நம் திராவிட நாயகன் அவர்கள் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை சரியான தரவுகளுடன் முன்வைக்கட்டும்.

மண்டபத்தில் யாரோ சொல்வதை நம்பி, அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TRB Raja has hit back at Palaniswami saying that party workers will not forgive those who insult Periyar and Anna


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->