இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்...! - ராகுல் காந்தி கைதுக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் விஜய்...!
This act that strangles throat democracy Chief Minister Vijay who outraged by Rahul Gandhi arrest
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் டெல்லியில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் இல்லம் அருகே எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களை காவலர்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டம், இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திப்பதாவது,"நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான செயலாகும்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.டெல்லியில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை, அந்தத் தேர்வு முறையே முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. மாணவர்களையும், அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தி, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
நீட் தேர்வு போன்ற நடைமுறைகள் அகற்றப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இதுவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதில் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அவை தீர்க்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக சிறப்பு ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும்.
இதன் வாயிலாக கல்வி, மருத்துவக் கல்வி உள்ளிட்ட துறைகளில் மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது நிரந்தரத் தீர்வாகவும், மாநிலங்களுக்கு இடைக்கால அதிகாரங்களை வழங்குவது தற்காலிகத் தீர்வாகவும் அமையும்.
இந்த நிலைப்பாட்டை கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக, கழகத்தின் சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலும் இதுதொடர்பாக விரிவாக எடுத்துரைத்துள்ளோம்.மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் எதிர்பார்ப்புகளையும் ஒன்றிய அரசு மதிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், நீட் தேர்வு முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே நிரந்தரத் தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
This act that strangles throat democracy Chief Minister Vijay who outraged by Rahul Gandhi arrest