"முதல்வரின் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும்..இவ்வளவு கர்வம் கூடாது! " – விஜயை விமர்சித்த துரைமுருகன்!
There should be dignity in the Chief Minister speech such arrogance is uncalled for Duraimurugan criticizes Vijay
கரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பேச்சில் கண்ணியமும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும், அரசியலில் வெற்றி பெற்றதால் கர்வத்துடன் பேசக் கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் விஜய், அவர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கரூர் சம்பவம் தனது வாழ்க்கையில் ஆறாத காயமாகவே இருக்கும் என்று கூறியதுடன், அன்றைய காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
"எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரண்டபோது காவல்துறை என்னை முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம். நாமக்கல்லிலேயே என்னை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் கரூர் வரை அனுமதித்ததால் அந்த சூழ்நிலையை நம்பி நான் ஏமாந்துவிட்டேன். நெரிசலில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.
அதே உரையில் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்த விஜய், "திமுக ஊழலின் வெண்டிங் மெஷினாக செயல்பட்டது. விபத்து நடந்தபோது நான் ஓடி ஒளிந்துவிட்டதாக தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இப்போது யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். கடந்த ஆட்சியில் சிறிய கட்டிட அனுமதியிலிருந்து அரசு வேலை வரை அனைத்திற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது தவெக ஆட்சியில் கட்டிங், கமிஷன், ஊழல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது," என்று கூறியிருந்தார்.
இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் பேச்சு அரசியல் நாகரிகத்துக்கு ஏற்றதாக இல்லை என்று விமர்சித்தார்.
"பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளையும் மதித்து பேசும் பண்பை இதற்கு முன் இருந்த முதலமைச்சர்களிடம் பார்த்திருக்கிறோம். ஆனால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற பாணியில் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல," என்று அவர் கூறினார்.
மேலும், அரசியலில் வெற்றி, தோல்வி இரண்டும் இயல்பானவை என்பதை நினைவூட்டிய அவர், "ஒரு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் நிரந்தர வெற்றியாளர்கள் அல்ல. இன்று கிடைத்த வெற்றி நாளையும் தொடருமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஒரு காலத்தில் காங்கிரஸ் தங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நினைத்தது. பின்னர் அரசியல் சூழல் மாறியது. அதேபோல் அதிமுகவும் வலிமையான கட்சியாக இருந்தது. அரசியலில் மாற்றம் என்பது இயல்பான ஒன்று," என்றார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், "வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொண்டு, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிப்பவர்தான் உண்மையான அரசியல்வாதி. ஆனால் வெற்றி பெற்றவுடன் கர்வத்துடன் பேசுவது சரியல்ல. குறிப்பாக சொந்த பலத்தால் அல்லாமல், பிறரின் ஆதரவால் ஆட்சிக்கு வந்தவருக்கு இவ்வளவு கர்வம் தேவையில்லை," என்று விமர்சித்தார்.
முதல்வர் விஜயின் கரூர் உரையும், அதற்கு துரைமுருகன் அளித்த பதிலும் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
There should be dignity in the Chief Minister speech such arrogance is uncalled for Duraimurugan criticizes Vijay