பெண்ணையாறு நதிநீர் விவகாரம்; ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவிவரும் பெண்ணையாறு நதிநீர் விவகாரத்தில் தீர்வு காணுவதற்கு, ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகள் மற்றும் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் முறையான அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தமிழகத்தின் புகாரை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிணக்குகள் சட்டம், 1956-இன் பிரிவு 5-ன் கீழ் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கவும் உத்தரவிட்டது. 

தமிழ்நாடு அரசின் புகார் மனுவில், மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாகத் தீர்ப்பாயம் அமைப்பதே தீர்வாகும் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவது மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீரைத் திசைதிருப்பும் பணிகளை மேற்கொள்வது, கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பாதிப்பதாகக் கூறி 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Supreme Court has ordered the central government to constitute a tribunal to resolve the Pennaiyar river water dispute


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->