"மாணவர்கள் மத்தியில் கல்ட் கலாச்சாரம் அழிய வேண்டும்"!மாணவர்கள் அந்த விஷயத்தில் வெளியில் வர வேண்டும்! – அண்ணாமலை அட்வைஸ்!
The cult culture among students must be eradicated Students need to break free from it Annamalai advice
மாணவர்கள் யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்றும் 'கல்ட்' கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றும், அடுத்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு இளைஞரும் தலைமைப் பண்புடன் உருவாக வேண்டும் என்றும் 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிராண்டுகளையும் பிரபலங்களையும் கொண்டாடுவதை விட, சமூக மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக இளைஞர்கள் வளர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, 'வி தி லீடர்ஸ்' என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இந்த அமைப்பின் சார்பில் பொள்ளாச்சியில் 'போதையில்லா பொள்ளாச்சி' என்ற மாநாடு நடத்தப்பட்டு, அதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வரும் அண்ணாமலை, சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இத்தகைய மாற்றம் நிறைந்த காலகட்டத்தில் மாணவர்களாக இருப்பது மிகப்பெரிய வாய்ப்பு. நீங்கள் எதை உருவாக்குவதற்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறீர்களோ, அதற்கே சமூகம் மதிப்பளிக்கும். புதிய ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினம்; அதை பராமரிப்பது ஒப்பீட்டளவில் எளிது" என்றார்.
மேலும், "வரும் காலங்களில் இந்தியாவில் பல பெரிய பிராண்டுகள் உருவாகும். அந்த பிராண்டுகளின் தாக்கத்தில்தான் உங்கள் வாழ்க்கை அமையும். யாரோ ஒருவர் பரிந்துரைப்பதால் பொருட்களை வாங்கும் பழக்கத்திலிருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டும். விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்கள் கூறுவதை கண்மூடித்தனமாக நம்பாமல், சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, "மாணவர்கள் மத்தியில் 'கல்ட்' என்ற மனநிலை முற்றிலும் அழிய வேண்டும். எல்லோரும் சமம். எல்லோரும் முன்னேற வேண்டும். ஒவ்வொருவரும் தலைவர்களாக உருவாக வேண்டும். தலைமைப் பண்பை வளர்த்துக்கொண்டு, சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். நீங்கள் பட்டம் பெறும் நாளில், 3 ஆயிரம் மாணவர்கள் இருந்தால், அவர்கள் 3 ஆயிரம் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
English Summary
The cult culture among students must be eradicated Students need to break free from it Annamalai advice