வாக்காளர் பட்டியல் திருத்தம் சதிவலை: 'ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும்': முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!
Tamil Nadu will fight against the electoral roll revision says Chief Minister Stalin
'மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ளதேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. அதன்படி பீஹாரை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் திருத்த சிறப்பு பணியை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீஹாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும். தமிழகம் வெல்லும்! என்று அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
English Summary
Tamil Nadu will fight against the electoral roll revision says Chief Minister Stalin