'வன்முறை காடாக மாறுகிறதா தமிழகம்'...? - சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைப் பார்த்து கொதித்தெழுந்த சசிகலா...!
Tamil Nadu turning into jungle violence Sasikala furious over law and order situation
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.அந்த பதிவில், திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகபட்டி அருகேயுள்ள வெள்ளாளகுளம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் அரிவாள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சென்னை கோயம்பேட்டில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதலின் போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு சில நாட்கள் பின்னர், அதே பகுதியில் ஏற்பட்ட மற்றொரு மோதலில் இரு பெண்கள் மீது வாகனம் ஏற்றி உயிரிழப்பு ஏற்படுத்தப்பட்ட சம்பவமும் பெரும் கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் காவலர்கள் விரைந்து மற்றும் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், பின்னர் நிகழ்ந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடிந்திருக்கலாம் என்ற வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஆளும் கட்சியுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவர் மதுபோதையில் காவலரை மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ள சசிகலா, இதுபோன்ற நிகழ்வுகள் மக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலங்களில் அடிக்கடி காணப்பட்ட வன்முறை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் பரவல் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இவற்றை கட்டுப்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அல்லது சமூக பின்னணியை பொருட்படுத்தாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களின் உயிர், உடைமை மற்றும் சமூக அமைதியை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பு என்பதால், சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என சசிகலா தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Tamil Nadu turning into jungle violence Sasikala furious over law and order situation