ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
Tamil Nadu government issues order for new Secretariat complex worth Rs 1200 crore
ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ராணுவத்துக்கு சொந்தமான புனித ஜார்ஜ் கோட்டையில்தான் தற்போது தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை இயங்கி வருகின்றன. அங்கு கடும் இட நெருக்கடியில் இருப்பதால், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை வேறு இடத்துக்கு மாற்ற நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய இந்திய தொல்லியல் துறை அனுமதி அளிப்பதில்லை. என்பதால் தற்போதும் கடும் இடநெருக்கடியில் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது.
இதனை சரி செய்வதற்காக, கடந்த 03-ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், ''நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.' என அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது, சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைப்பதற்கான இடம் மைலாப்பூர் நகரப் பகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான சுமார் 21 ஏக்கர், பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய் துறைக்கு சொந்தமான 1.73 ஏக்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான மற்றொரு 1.13 ஏக்கர் என மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலங்களை கையகப்படுத்தி சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைப்பதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை அரசு அளித்துள்ளது.
மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மூன்று மாதங்களுக்கும் சமர்ப்பிக்க பொதுப் பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கட்டிடக்கலை ஆலோசனைக்கான குழு, தொடக்க கட்டிட வரைபடம் மற்றும் வடிவமைப்புக்கான குழு, வரைபடம் மற்றும் வடிவமைப்பை இறுதி செய்வதற்கான குழு ஆகிய மூன்று குழுக்களை அமைக்கவும் பொதுப்பணித் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government issues order for new Secretariat complex worth Rs 1200 crore