மும்பை மேயர் முன்னிலையிலேயே பள்ளத்தில் விழுந்த நபர்: அதிகாரிகளை எச்சரித்த மேயர், ஆதித்யா தாக்கரே கடும் விமர்சனம்!
Shiv Sena UBT Leader Aaditya Thackeray Slams Mumbai Mayor After Civilian Falls Into Pothole During Inspection
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும், முதல் நாளே கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மும்பையின் முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி, கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மழை பாதிப்புகளை மும்பை மாநகராட்சி மேயர் ரிது தவ்டே நேரில் ஆய்வு செய்தபோது நடந்த விபரீதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேயர் முன்னிலையில் நடந்த விபத்து
இன்று காலை மும்பை மேயர் ரிது தவ்டே, மாநகராட்சி அதிகாரிகளுடன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தச் சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர், மழைநீர் தேங்கியிருந்ததால் இடுப்பளவு ஆழமுள்ள ஒரு பெரிய பள்ளத்தை கவனிக்காமல் அதற்குள் திடீரென விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிச் சென்று, அவருக்குக் கைகொடுத்துப் பள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
அதிகாரிகளுக்கு மேயர் விடுத்த எச்சரிக்கை
தன் கண் முன்னாலேயே பொதுமகன் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததைக் கண்டு மேயர் ரிது தவ்டே கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். அங்கிருந்த அதிகாரிகளை நோக்கி, "இந்த ஆபத்தான பள்ளத்தை ஏன் இதுவரை சரிசெய்யவில்லை? ஒருவேளை பராமரிப்புப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்தால், அங்கு எச்சரிக்கைப் பலகை (Caution Board) வைத்திருக்க வேண்டாமா?" என்று கடுமையாகச் சாடினார். மேலும், இனிமேல் இதுபோன்ற அலட்சியப் போக்கு நீடித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆதித்யா தாக்கரேவின் விமர்சனம்
இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே மேயர் மற்றும் ஆளும் நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மலிவான அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, நகரின் அடிப்படை நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்" எனத் தற்போதைய மாநகராட்சி நிர்வாகத்தைச் சாடியுள்ளார். பருவமழையின் முதல் நாளே மும்பையின் உள்கட்டமைப்புப் பலவீனம் வெளிப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shiv Sena UBT Leader Aaditya Thackeray Slams Mumbai Mayor After Civilian Falls Into Pothole During Inspection