#சென்னை || முகக்கவசம் அணியாத கல்லூரி மாணவன் முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார் - வெளியான பெரும் அதிர்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, தம்பி அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீம் அவர்களை முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் சிறிநீர் கழித்து, கொடும் சித்திரவதை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். 

பகுதிநேரப் பணியாளராக மருந்தகத்தில் பணிசெய்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பி ரஹீமை முகக்கவசம் அணியாத ஒற்றைக் காரணத்திற்காக, கடுமையாகத் தாக்கி வதைத்திருப்பதும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து அடக்குமுறைகளை ஏவுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

மக்களைக் காக்கும் காப்பரண்களாக இருக்க வேண்டிய காவல்துறையினர் இன்றைக்கு மக்களே கண்டு அஞ்சி ஒதுங்குமளவுக்கு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதும், அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மாறி அடித்தட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதும் காவல்துறை எனும் கட்டமைப்பு எந்தளவுக்கு பாழ்பட்டு நிற்கிறது என்பதற்கான நிகழ்காலச் சான்றுகளாகும்.

ஆகவே, காவல்துறையை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டியதும், காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் அதிகார அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கான சேவையை உறுதிசெய்ய வேண்டியதும் காவல்துறையைத் தன்வசம் கொண்டிருக்கிற முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும்.

ஆகவே, தம்பி அப்துல் ரஹீம் மீது பொய்யாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய காவல்துறையினர் மீது துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தம்பி ரஹீமுக்கான மருத்துவச்சிகிச்சைக்குரிய செலவுகளை ஏற்று, அவருக்குரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seeman say about kodungayur police worst


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->