உலக நாடுகள் ஒன்றிணைந்து ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்.. சரத்குமார் வலியுறுத்தல்.!!
sarathkumar statement for ukraine and russia war
மூன்றாம் உலகப்போரை தவிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து ரஷியா - உக்ரைன் நாட்டு போர்நிறுத்தத்திற்கு உதவ வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர், மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்காமல், உக்ரைன் நாட்டுமக்கள், இந்தியர்கள் மற்றும் உக்ரைனில் சிக்கியுள்ள பிறநாட்டு மக்களின் உயிர்பாதுகாப்பை பிரதானமாக கருதி, உக்ரைனில் அமைதி நிலவ உலக நாடுகள் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.
உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழல், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தையும், உலகளவில் பொருளாதார தாக்கத்தையும், அமைதியையும் சீர்குலைத்துள்ளது. இந்த இக்கட்டான போராட்ட களத்திலிருந்து இந்தியர்களையும், உக்ரைன் நாட்டு மக்களையும் பாதுகாப்பது உலக நாடுகளின் கடமை.
எனவே, ரஷியா - உக்ரைன் நாட்டு போர் விவகாரத்தில் ஐநா சபை உடனடியாக தலையிட்டு, சுமூகத் தீர்வு காண வேண்டும். உலகில் அமைதி நிலவ, இந்திய அரசு சூழலை தகுந்த முறையில் கையாண்டு, உக்ரைனில் உள்ள இந்தியர்களையும், உக்ரைன் மக்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூன்றாம் உலகப்போரை தவிர்க்க, விரைவில், உக்ரைனில் இயல்புநிலை திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
sarathkumar statement for ukraine and russia war