சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை! சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? நடிகர் அர்ஜுன் பேச்சு!
Sanatana Dharma is a way of life If there is no Sanatana Dharma then parents should be thrown out Is it possible Actor Arjun speech
நடிகர் அர்ஜுன் நடித்துள்ள 'ப்ளாஸ்ட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த சனாதன தர்மம் குறித்த கருத்துகள் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சனாதன தர்மம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அர்ஜுன், சனாதன தர்மம் என்பது ஒரு மதம் அல்ல, அது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுத்தரும் ஒரு வாழ்க்கை முறை எனக் கூறினார்.
அவர் பேசுகையில், “எனக்குத் தெரிந்தவரை சனாதனம் என்பது வாழ்க்கை முறை. எப்படி வாழ வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், தவறு செய்யக்கூடாது, திருடக்கூடாது, பிறருடைய பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதெல்லாம் அதில் அடங்கும். சிறு வயதில் நம்மை அன்புடன் வளர்த்த பெற்றோரை, அவர்கள் வயதான பிறகு நாம் கவனித்து கொள்ள வேண்டும் என்றும் சனாதன தர்மம் கூறுகிறது” என்றார்.
மேலும், “சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்று சொன்னால், அப்பா அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட வேண்டுமா? அது சாத்தியமா? சனாதனம் என்பது மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறி. அதை அனைவரும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
அர்ஜுனின் இந்தக் கருத்துகள், கடந்த சில ஆண்டுகளாக சனாதன தர்மம் குறித்து விமர்சன கருத்துகளை முன்வைத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற சமூக தீமைகளுடன் ஒப்பிட்டு, அது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்தக் கருத்து தேசிய அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பல்வேறு மாநிலங்களில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்தது.
சமீபத்தில் சட்டப்பேரவையிலும் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் மீண்டும் பேசியிருந்த நிலையில், அர்ஜுனின் இந்தப் பதில் அதற்கு மறைமுக எதிர்வினையா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
எனினும், தனது கருத்து சனாதன தர்மம் குறித்து தாம் புரிந்துகொண்ட விளக்கத்தின் அடிப்படையிலானது என்றும், அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
English Summary
Sanatana Dharma is a way of life If there is no Sanatana Dharma then parents should be thrown out Is it possible Actor Arjun speech