அண்ணன் வைகோ மீது மரியாதை குறையாது... ஆனால் அரசியல் நாகரிகம் காக்கிறேன்...! - ஓ. பன்னீர்செல்வம்
Respect my brother Vaiko not decrease but I protect political civilization O Panneerselvam
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் காலத்தில் “ம.தி.மு.க. கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை” என ஜெயலலிதாவிடம் தவறான தகவல் தெரிவித்ததாக, ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வைகோ வெளிப்படையாக கூறியிருந்தார். இதற்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது அமைதியான ஆனால் தாக்கத்துடன் கூடிய விளக்கத்தை அளித்துள்ளார்.
நேற்று சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,"நான் ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் நெருக்கமாக பணியாற்றியவன். அவர் என்ன பேச சொல்லியிருக்கிறாரோ, அதைத்தவிர வேறு சொல் என் வாயிலிருந்து வெளிவந்ததில்லை. இதை அனைவரும் நன்கு அறிவார்கள்.அண்ணன் வைகோ மீது இன்று வரை எனக்கு ஆழ்ந்த மரியாதை, அன்பு, பாசம், பற்றுகள் நிலைத்திருக்கின்றன.

எனவே அவர் கூறியவற்றுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அது அவரது மனதை புண்படுத்தக்கூடும். அரசியல் நாகரிகத்தையும், பழைய உறவையும் மதித்து அந்த விவகாரத்தில் நான் மௌனம் காக்கிறேன்” என கூறினார்.அவர் மேலும்,"2011ல் நடந்த ஒரு விவாதத்தை 14 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் வெளிக்கொணர வேண்டிய நிலை ஏன் அண்ணன் வைகோவுக்கு ஏற்பட்டது என எனக்குத் தெரியவில்லை. எனது பதிலை அவர் கேட்டால், நான் மரியாதையுடன் சொல்ல தயாராக இருக்கிறேன்.
நான் மற்றும் செங்கோட்டையன் போன்றோர் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் ஒன்றிணைந்து வலிமையாக நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு வருகிறோம். இன்றைய அ.தி.மு.க. தொண்டர்கள், இரண்டு கோடி பேரும், கட்சி மீண்டும் ஒருமித்து நிற்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.அதேபோல நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்களும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் சிலரின் தனிப்பட்ட விருப்பம், வெறுப்பு, இந்த இயக்கம் ஒன்றிணைவதற்கான தடையாக மாறி வருகிறது.அந்த தனிப்பட்ட மனோபாவம் கட்சியின் எதிர்காலத்துக்கு எந்த நன்மையையும் அளிக்காது. எதை அள்ளி கொண்டு செல்லப்போகிறார் என்பதும் புரியவில்லை. ஆனாலும், அ.தி.மு.க.வை மீண்டும் ஒன்றிணைக்கும் பணியில் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம். பா.ஜ.க. தலைவர்களும் இதற்காக எங்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்” என ஓ. பன்னீர்செல்வம் உறுதியுடன் தெரிவித்தார்.
English Summary
Respect my brother Vaiko not decrease but I protect political civilization O Panneerselvam