முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத்தில் அதிரடி ரெய்டு...! சென்னை, திருச்சியில் குவிந்த மத்திய குற்றப்பிரிவு காவலர்கள்...!
raid conducted at residence former minister Anbil Mahesh Central Crime Branch police officers gathered Chennai and Trichy
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இன்று சோதனை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், பின்னர் அமைச்சராக பொறுப்பேற்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த அவர், கல்வித்துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டசபை தேர்தலில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தோல்வியடைந்தார். இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத்தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத்தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருச்சியில் உள்ள இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் அல்லது வழக்கிற்கு தொடர்புடைய பிற ஆதாரங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த வழக்கின் பின்னணியில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது முக்கிய புகார் முன்வைக்கப்பட்டது.தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம், பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகள் உள்ளிட்டவற்றை பெற்றுத்தருவதாக கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து பி.டி. அரசகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், வழக்கு விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லங்களில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
raid conducted at residence former minister Anbil Mahesh Central Crime Branch police officers gathered Chennai and Trichy