'வாக்கு' திருட்டு, 'சர்கார்' திருட்டைத் தொடர்ந்து தற்போது 'சீட்' திருட்டு; பாஜகவை விமர்சித்துள்ள ராகுல் காந்தி..!
Rahul Gandhi criticizes the BJP stating that after the theft of votes there is now the theft of seats
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மீனாட்சி நடராஜன் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 08-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் ஹைதராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு குறித்து குறிப்பிடாத நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் 'ஜனநாயக படுகொலை' என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானியின் வேட்புமனுவை திருத்தம் செய்து சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
''வாக்கு திருட்டு, சர்கார் திருட்டு போன்றவற்றை தொடர்ந்து பாஜக இப்போது ‘சீட்’ திருட்டில் ஈடுபடுகிறது. மாநிலங்களவை தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து அதை முடித்துவிட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட மீனாட்சி நடராஜன், தனது வேட்புமனுவில் அனைத்து விவரங்களையும் சமர்பித்தார். அவர் மீது வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. ஆனால், பாஜகவின் ஆட்சேபனையை ஏற்று அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
அதுவே பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானியின் பெயர் உட்பட பல்வேறு பிழைகளை வேட்புமனுவில் செய்திருந்தார். இருப்பினும் அதை திருத்த அவருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது தேர்தல் ஆணையம்.

இரண்டு வேட்பாளர்கள். ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. மற்றொருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை செய்தது அதே தேர்தல் ஆணையம்தான். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை முறையிட்ட காங்கிரஸ் கட்சியினரை சந்திக்க அதிகாரிகள் சந்திக்க மறுத்தனர். இறுதியில் நாங்கள் அவர்களை சந்தித்த போது, அது தொடர்பாக அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
வரும் நாட்களில் இது போன்ற நிகழ்வுகளை நாம் அதிகம் பார்க்க முடியும். ஏனெனில், தேர்தலை வெல்வதை விட அதை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைப்பது பாஜக-வுக்கு எளிதான காரியம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Rahul Gandhi criticizes the BJP stating that after the theft of votes there is now the theft of seats